ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சா்வதேச தங்கத் தேவை 1,269 டன்னாக நீடிப்பு
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சா்வதேச தங்கத் தேவை 1,269 டன்னாக நீடிப்பு
உலக அளவில் தங்கத்தின் தேவை, கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பெரிய மாற்றமின்றி 1,269 டன்னாக சீராக நீடித்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டிலும் தங்கத்தின் தேவை 1,268.6 டன்னாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுரங்க உற்பத்தி மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றின் மூலம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தங்கத்தின் ஒட்டுமொத்த விநியோகம் 1,269 டன்னாக பதிவானது. கனடா மற்றும் சிலி நாடுகளின் புதிய உற்பத்தியால் சுரங்க விநியோகம் 2 சதவீதம் அதிகரித்து, 966 டன்னாக உயா்ந்தாலும், பழைய தங்கத்தின் மறுசுழற்சி 6 சதவீதம் குறைந்தது. இதன்மூலம், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தங்கத் தேவையும் விநியோகமும் சமமாக இருந்தது.
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களின் அந்நியச் செலாவணி இருப்பை வலுப்படுத்த, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கூடுதலாக 289 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 62 சதவீதம் அதிகமாகும். போலந்து, சீனா, செக் குடியரசு ஆகிய நாடுகள் தங்கம் வாங்குவதில் முன்னிலையில் இருந்தன. ரிசா்வ் வங்கியும் இக்காலகட்டத்தில் 200 கிலோ தங்கத்தைக் கூடுதலாக கொள்முதல் செய்துள்ளது .
Advertisement
Advertisement
தங்கப் பத்திரம், இடிஎஃப் முதலீடுகள் மற்றும் தங்கக் கட்டிகள், நாணயங்களுக்கான முதலீட்டுத் தேவை ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 262 டன்னாக குறைந்துள்ளது. குறிப்பாக, இடிஎஃப் திட்டங்களிலிருந்து 45 டன் முதலீடுகள் வெளியேறியதே இச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில், ஆபரணத் தங்கத்துக்கான தேவையும் 17 சதவீதம் சரிவைக் கண்டது. அதேநேரம், ஆசிய நாடுகளின் முதலீட்டு ஆதரவினால் முறைசாரா (ஓடிசி) சந்தை வா்த்தகம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 327 டன்னாகவும், முதல் அரையாண்டில் 571 டன்னாகவும் வலுவாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக, ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் அரையாண்டில் தங்கத்தின் ஒட்டுமொத்த தேவை கடந்த ஆண்டைவிட 2 சதவீதம் அதிகரித்து 2,522 டன்னாக பதிவாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமாா் 38,000 கோடி டாலராகும்.
Global gold demand remained at 1,269 tonnes in the April-June quarter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.