வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!
வா்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நிலையில் பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள் பற்றி..
இந்தியா - பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நிலையில், நாட்டில் மும்பை, சூரத், ஜெய்ப்பூர், சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களிலிருந்து பிரிட்டனுக்கு தங்கம், வெள்ளி, வைர நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இரு நாடுகள் இடையே விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை நடைமுறைக்கு வந்த முதல் நாளில் ஜவுளி, நகைகள் என ரூ.1348 கோடி மதிப்பிலான (140 மில்லியன் டாலர்) பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.
Advertisement
Advertisement
ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே 140 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள 50 சரக்குத் தொகுப்புகள் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில், இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள், தொழில்முனைவோர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். பல்வேறு துறைகள் பிரிட்டன் சந்தையில் வலுவான தொடர்பைப் பெறும். மேலும், தொழில்நுட்பம், தொழில்முறை சேவைகள் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை பெருக்குவதுடன், திறமையான இந்தியர்களின் வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகரிக்கவும் இது துணைபுரியும் என்று பதிவிட்டிருந்தார்.
பிரிட்டனுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஜவுளி, ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் ரத்தினம்-ஆபரணங்கள் போன்ற அதிக மனிதவளத் தேவை கொண்ட பல துறைகள், பிரிட்டன் சந்தையில் சுங்கவரி இல்லாத அணுகலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், ஜவுளி, ரத்தினம்-ஆபரணங்கள் மற்றும் கடல்சார் பொருள்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே சுங்கவரி இல்லாத அடிப்படையில் சரக்குகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிட்டனர்.
குறிப்பிடத்தக்க வகையில் இந்தியாவில் உள்ள 30 ஏற்றுமதியாளர்கள் 10 மில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம், வைரம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆபரணங்களை இங்கிலாந்துக்கு அனுப்பியதாக ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (GJEPC) தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இங்கிலாந்துக்கான ஏற்றுமதி 2.5 பில்லியன் டாலரை எட்டும் என்று இத்துறை சார்ந்த அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.
இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 99 சதவீதத்திற்கும் (வர்த்தக மதிப்பில் கிட்டத்தட்ட 100 சதவீதம்) சுங்கவரி இல்லாத சந்தைத் தொடர்பு கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கரூரிலிருந்து..
கரூரில் இருந்து ஜவுளி வர்த்தக சங்கம் சார்பில் ரூ. 2 கோடி மதிப்பிலான ஜவுளி துணிகள் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Trade Agreement Gold, silver diamond jewelry exported to Britain
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.