முகப்பு
வணிகம்

23,400 புள்ளிகளை எட்டிய நிஃப்டி; சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவு; ஐடி துறை பங்குகள் பின்னடைவு!

சென்செக்ஸ் 303.67 புள்ளிகள் சரிந்து 74,346.17 புள்ளிகளாகவும், நிஃப்டி 77.95 புள்ளிகள் சரிந்து 23,405.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 3 ஜூன் 2026, 5:15 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: மற்றொரு ஏற்ற இறக்கம் நிறைந்த வர்த்தக அமர்வில், இன்றைய வர்த்தகத்தில், இந்தியப் பங்குச் சந்தை சரிவுடன் நிறவடைந்தன.

கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற சூழல் காரணமாக, வர்த்தக நேரத்தின் இடையே நிஃப்டி 50 குறியீடு 23,200 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது.

பலவீனமான தொடக்கத்திற்குப் பிறகும், நேரம் செல்லச் செல்ல பங்குச் சந்தையின் இழப்புகள் அதிகரித்தன. நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தகத்தின் குறைந்தபட்ச அளவான 23,151.50 புள்ளிகள் வரை சரிந்தது. இருப்பினும், வர்த்தக நேரத்தின் நடுப்பகுதியில், குறிப்பாக வாகன மற்றும் வங்கித் துறை பங்குகளில் ஏற்பட்ட மீட்சி, சந்தையின் இழப்புகளில் சிலவற்றை ஈடுகட்ட உதவியது.

Advertisement

Advertisement

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 303.67 புள்ளிகள் சரிந்து 74,346.17 புள்ளிகளாகவும், நிஃப்டி 77.95 புள்ளிகள் சரிந்து 23,405.60 புள்ளிகளாக நிலைபெற்றது.

இன்று நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 0.4 சதவீதமும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடு 0.1 சதவீதமும் சரிந்தன.

சென்செக்ஸில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 8.43 சதவீதமும், டெக் மஹிந்திரா 6.23 சதவீதமும், எச்.சி.எல் டெக் 5.25 சதவீதமும் மற்றும் இன்ஃபோசிஸ் 3.82 சதவீதமும் சரிந்தன. மேலும் ஐடிசி, எடர்னல், லார்சன் & டூப்ரோ மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் வெகுவாக சரிந்தன. மறுபுறம் இன்டர்குளோப் ஏவியேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ட்ரென்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி குறியீட்டில் ஏற்பட்ட சரிவுக்கு டிசிஎஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் முக்கியக் காரணமாக அமைந்தன. அதே வேளையில் அப்போலோ மருத்துவமனைகள், மேக்ஸ் ஹெல்த்கேர், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.

துறைவாரியாகப் பார்க்கையில், ஐடி குறியீடு 5.5 சதவீதமும், எஃப்எம்சிஜி மற்றும் ரியல் எஸ்டேட் குறியீடுகள் தலா 1 சதவீதமும், நுகர்பொருள் பொருட்கள் குறியீடு 0.8 சதவீதமும் சரிந்தன. மாறாக தொலைத்தொடர்பு குறியீடு 2 சதவீதமும், பொதுத்துறை வங்கி குறியீடு 1.7 சதவீதமும், சுகாதாரத் துறை 0.5 சதவீதமும் உயர்ந்தன.

அபார் இண்டஸ்ட்ரீஸ், ஐஎஃப்சிஐ, வோடபோன் ஐடியா, சென்னை பெட்ரோ, எச்எஃப்சிஎல், ஃபெடரல் வங்கி, வெல்ஸ்பன் கார்ப், ஜே.கே. வங்கி, டெக்னாலஜிஸ் இந்தியா உள்ளிட்ட100க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் 52 வார உச்சத்தை எட்டியது.

பங்குகளைப் பொறுத்தவரை, ஜான் காக்கரில் இந்தியா நிறுவனம் ரூ. 1,250 முதல் ரூ. 1,300 கோடி மதிப்பிலான ஒரு புதிய ஆர்டரைப் பெற்றதை அடுத்து, அதன் பங்கு விலை 20 சதவீதம் உயர்ந்து 52 வார உச்சத்தை எட்டியது. குஜராத் உர்ஜா விகாஸ் நிகம் லிமிடெட் உடன் பேட்டரி ஆற்றல் சேமிப்பு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, அத்வைத் எனர்ஜி டிரான்சிஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5% லாபத்தை ஈட்டியது.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 8,362.92 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 3 சதவீதம் உயர்ந்து 98.92 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.