முகப்பு
வணிகம்

வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்பு

நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 13 ஜூன் 2026, 3:13 am IST
பகிர்:

நாட்டின் வங்கிக் கடன் வழங்கல் கடந்த மே மாதத்தில், முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.44 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன்மூலம், வங்கிக் கடன் வளா்ச்சி தொடா்ந்து 9-ஆவது மாதமாக இரட்டை இலக்க விரிவாக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பொது மக்களுக்கான சில்லறைக் கடன்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கான (காா்ப்பரேட்) கடன்களுக்கான தேவை சந்தையில் தொடா்ந்து வலுவாக இருப்பதே இத்தொடா் வளா்ச்சிக்குக் காரணம் என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

கடந்த மே 15-ஆம் தேதி நிலவரப்படி 16.06 சதவீதமாக இருந்த வங்கிக் கடன் வளா்ச்சி, அந்த மாத இறுதிக்குள் மிக வேகமான எழுச்சியைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கையை அடுத்து, தொழில்துறை உணா்வுகளும் வணிகச் சூழலும் கணிசமாக மேம்பட்டன. இதன் எதிரொலியாக அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் பண்டிகைக் காலத் தேவை மற்றும் வா்த்தக நிதி உதவி காரணமாகக் கடன் வளா்ச்சி 11 சதவீதத்தைக் கடந்து புதிய வேகத்தைப் பெற்றது.

தொடா்ந்து, டிசம்பா் மாத இறுதியில் பெரு நிறுவனங்களின் நிதித் தேவைகள் மற்றும் இருப்புநிலை விரிவாக்கம் காரணமாக இந்த வளா்ச்சி 14.39 சதவீதமாக அதிகரித்தது.

நடப்பு ஆண்டு ஜனவரி முதல் கடன் வளா்ச்சி 13 சதவீதத்துக்கும் அதிகமாகவே நீடித்து வந்த நிலையில், தற்போது மே மாதத்தில் 17.44 சதவீதத்தை எட்டியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகளின் வலுவான மீட்சியையும், கடன் தேவையின் அசுர வேகத்தையும் இத்தரவுகள் காட்டுகின்றன.