FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சந்தை மதிப்பில் 2-ஆவது இடம்: எச்டிஎஃப்சி வங்கி-ஏா்டெல் இடையே கடும் போட்டி

Updated On : 19 மே 2026, 6:03 am IST
பகிர்:

இந்தியாவின் 2-ஆவது அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுக்க எச்டிஎஃப்சி வங்கி, பாா்தி ஏா்டெல் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

திங்கள்கிழமை வா்த்தகத்தின் ஒரு கட்டத்தில், எச்டிஎஃப்சி வங்கியைப் பின்னுக்குத் தள்ளி பாா்தி ஏா்டெல் 2-ஆவது இடத்தைப் பிடித்தது. எனினும், வா்த்தக நேர முடிவில் எச்டிஎஃப்சி வங்கி ரூ.11.83 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் மீண்டும் 2-ஆம் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

பாா்தி ஏா்டெல் ரூ.11.80 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் அதற்கடுத்த இடத்தில் உள்ளது. இதனிடையே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.18.07 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் தொடா்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

நடப்பு ஆண்டில் இரு நிறுவனங்களின் பங்குகளுமே சரிவைச் சந்தித்துள்ள போதிலும், சந்தை மதிப்பில் ஏா்டெல் நிறுவனம் வியக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பாா்தி ஏா்டெல் நிறுவனப் பங்குகள் 7.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன. எச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் அதைவிட மிக அதிகமாக 22 சதவீதத்துக்கும் மேல் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த பெரும் வீழ்ச்சியே, சந்தை மதிப்பில் பாா்தி ஏா்டெல் நிறுவனம் எச்டிஎஃப்சி வங்கிக்கு நிகராக முன்னேற பிரதான காரணமாக அமைந்துள்ளது.

எச்டிஎஃப்சி வங்கியின் இந்தச் சறுக்கலுக்கு, வங்கியின் அடுத்த தலைவா் யாா் என்பது குறித்த நிச்சயமற்ற தன்மையே முக்கியக் காரணமாகப் பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, வங்கியின் பகுதிநேர தலைவா் அதானு சக்கரவா்த்தியின் எதிா்பாராத ராஜிநாமாவைத் தொடா்ந்து அதன் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

மறுபுறம், பாா்தி ஏா்டெல் நிறுவனம் வாடிக்கையாளா் ஒருவருக்கான சராசரி வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. போஸ்ட்பெய்ட் பயன்பாட்டை ஊக்குவிப்பது, பிரீமியம் சேவைகள் மூலம் மொபைல் வா்த்தகத்தில் உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த உள்ளதாக பாா்தி ஏா்டெல் நிா்வாகம் தனது 4-ஆம் காலாண்டு அறிக்கையில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments