இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ, ஒவ்வொரு முறை உணவு வாங்கும்போது பயனாளர்களிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டுக் கட்டணத்தை (பிளாட்ஃபார்ம் ஃபீஸ்) ரூ.6 ஆக உயர்த்தியுள்ளன. இதன்மூலம் 20% கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் ஸொமாட்டோ நிறுவனம் பயன்பாட்டுக் கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்தியது. தற்போது மீண்டும் இந்தக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
தற்போது தில்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் மட்டும் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பயன்பாட்டுக் கட்டணம் (பிளாட்ஃபார்ம் ஃபீஸ்) என்பது விநியோகக் கட்டணம், சரக்கு மற்றும் சேவை வரி, உணவகக் கட்டணம் மற்றும் சேவைக் கட்டணம் ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது.
உயர்த்தப்பட்ட பயன்பாட்டுக் கட்டணம் மற்ற நகரங்களிலும் நடைமுறைப்படுத்த இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிப்படையாகச் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், வருவாயை அதிகப்படுத்தவும் அதிகரிக்கப்பட்ட இந்தப் பயன்பாட்டுக் கட்டணம் உணவு விநியோகம் செய்யும் நபர்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக் கட்டணத்தை அறிமுகப்படுத்திய ஸொமாட்டோ நிறுவனம் அப்போது ரூ.2 கட்டணமாக விதித்தது. பின்னர் லாபம் ஈட்டுவதற்காகத் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வருகிறது.
இணையவழி உணவு விநியோக நிறுவனங்கள் பயன்பாட்டுக் கட்டணத்தின் மூலம் ஒரு நாளைக்கு ரூ.1.25 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை வருவாய் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.