முகப்பு
கண்ணோட்டம்

பெண் கல்விக்கு ஓர் ஆரம்பம்

இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்கிறார் சுவாமிஜி. இந்த நாட்களில் தான்அதற்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கினார் அவர்.

Updated On : 9 ஜனவரி 2014, 5:38 pm IST
பகிர்:

இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்கிறார் சுவாமிஜி. இந்த நாட்களில் தான்அதற்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்கினார் அவர். பாக்பஜாரில் சென்று அன்னையைத் தரிசித்ததை அதற்கு ஓர் ஆரம்பமாகக் கொள்ளலாம். ஏனெனில் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆற்றலை நல்க வந்திருக்கும் மகா சக்தியாக அவர் அன்னையைக் கருதினார். அன்னை ஸ்ரீசாரதா தேவி என்பவர் யார், அவரது வாழ்க்கையின் உட்பொருள் என்ன என்பதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. உங்களுள் யாருமே புரிந்து கொள்ளவில்லை, படிப்படியாகத் தெரிந்து கொள்வீர்கள். சகோதரா, சக்தி இல்லாமல் உலகிற்கு முன்னேற்றம் கிடையாது. நமது நாடு அனைத்து நாடுகளிலும் கடைசியில் இருப்பது ஏன்? பலம் இழந்து கிடப்பது ஏன்? சக்தி அவமதிக்கப்படுவதுதான் காரணம். இந்தியாவில் இந்த மகா சக்தியை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வதற்கே அன்னை தோன்றியுள்ளார். அவரை ஆதாரமாகக் கொண்டு மீண்டும் கார்க்கிகளும் மைத்ரேயிகளும் உலகில் தோன்றுவார்கள்' என்றார் அவர்.

பெண்கள் பணிக்காகவே இங்கிலாந்திலிருந்து அவருடன் வந்திருந்த நிவேதிதையை அன்னையுடன் தங்கவும் ஏற்பாடு செய்தார் சுவாமிஜி. ஒரு வாரம் அன்னையுடன் வாழ்ந்த நிவேதிதை பின்னர் அன்னையின் வீட்டிற்கு அருகில் சுவாமிஜி ஏற்பாடு செய்த வாடகை வீட்டில் தங்கினார். நிவேதிதை அன்னையின் வீட்டில் தங்கியதும் சரி, அருகிலுள்ள இந்துக் குடும்பங்களுக்கு இடையில் ஒரு வீட்டை அவருக்காக வாடகைக்கு அமர்த்தியதும் சரி அத்தனை எளிதான ஒன்றாக இருக்கவில்லை. சமுதாயத்தில் விதவையாகக் கருதப்பட்ட அன்னை, ஒரு வெளிநாட்டுப் பெண்ணை வீட்டில் அனுமதித்ததைஏற்றுக் கொள்ள பலரும் உடன்படவில்லை. அன்னையின் முற்போக்கு எண்ணங்களும், சுவாமிஜியின் பணியில் அவர் கொண்டிருந்த நம்பிக்கையும், சுவாமிஜியின் உத்வேகமுமே இவை அனைத்தையும் சாதித்தன.

1898 நவம்பர் 12ம் நாள் அன்னை பேலூரில் மடத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தில் பக்தைகள் பலருடன் வந்து அந்த இடத்தைப் புனிதப்படுத்தினார். அன்று மாலையில் அவரும் பக்தைகளும் பலராம்போஸின் வீட்டிற்குச் சென்றனர். சுவாமிஜி, பிரம்மானந்தர், சாரதானந்தர், ம-சுரேந்திரநாத் தத்தர், ஹர மோகன் போன்ற பலரும் அங்கே சென்றனர். பெண்கள் கல்விக்காக ஒரு பள்ளி திறப்பது பற்றி கலந்து பேசுவதற்காக அன்று கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிவேதிதை அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி ஒரு சிறிய உரை நிகழ்த்தினார். அந்தப் பணிக்கு ஆதரவு தருமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டத்தில் ஆதரவு இல்லை.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.