எது மதம்? சுவாமிஜியின் விளக்கம்
பொதுவாக மதம் என்றால் எதைக் கருதுகிறோம்? கோயில் சர்ச், மசூதி என்று போக வேண்டும், சில சம்பிரதாயங்களைப் பின்பற்ற வேண்டும்,
பொதுவாக மதம் என்றால் எதைக் கருதுகிறோம்? கோயில் சர்ச், மசூதி என்று போக வேண்டும், சில சம்பிரதாயங்களைப் பின்பற்ற வேண்டும், சில சமயச் சின்னங்களை அணிந்து கொள்ள வேண்டும், சில இயக்கங்களைச் சார்ந்திருக்க வேண்டும். ஆனால் மனிதனை ஒற்றுமைப்படுத்த வேண்டிய இந்தப் புறச் செயல்பாடுகள் பெருமளவில் கொள்ளைவெறிக்கும், மதச் சண்டைகளுக்கும், வன்முறைகளுக்கும், ரத்த ஆறுபெருகுவதற்கும் காரணமாக இருந்து விடுவதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அதனால் சுவாமிஜி இந்தப் புறப் பொதிவுகளிலிருந்து உண்மை மதத்தைப் பிரித்தார். சர்ச்சுக்குப் போவதோ, நெற்றியில் சின்னங்களை இட்டுக் கொள்வதோ, விசித்திரமாக உடை அணிந்து கொள்வதோ மதம் ஆகிவிடாது. வானவில்லின் அத்தனை வண்ணங்களையும் நீங்கள் உங்கள்மீது தீட்டிக் கொள்ளலாம். ஆனால் உங்கள் இதயம் திறக்கவில்லை என்றால் வீங்கள் கடவுளை உணரவில்லை என்றால், எல்லாமே வீண் என்றார் அவர்.
சுவாமிஜி மதம் வார்த்தையை இந்தப் பொருளிலேயே குறிப்பிட்டார் என்பதை மனத்திற்கொள்வது இன்றியமையாதது. மதம் என்றால்ல் ஆன்மீகம், ஆன்மா என்றவார்த்தையிலிருந்து வந்தது ஆன்மீகம் என்ற வார்த்தை. ஆன்மா பற்றிய கருத்து, உலகச் சிந்தனைக்கு இந்தியாவின் கொடைகளுள் ஒன்று ஆகும். ஆன்மா சுயமாக விளங்குவது, உயர்வு வடிவானது, எல்லா அறிவிற்கும் ஆனந்தத்திற்கும் உண்மையான காரணமாக இருப்பது எல்லா ஆன்மாக்களும் பரமாத்மாவில் ஒன்றாக உள்ளன. பரமாத்மாவாகிய இறைவனுடன், தான் ஒன்றுபட்டவன் என்பதை அனுபவபூர்வமாக உணர்வதோ வாழ்க்கையின் லட்சியம் என்றார் சுவாமிஜி.
நம்முள் உறைகின்ற இந்த ஆன்மா ஆற்றலின் உறைவிடமாக உள்ளது. அது விழித்தெழும்போது ஆற்றல் பிறக்கிறது, ஆனந்தம் நிறைகிறது. இவ்வாறு ஆன்மாவை விழித்தெழச் செய்வதற்கு, வெளிப்படுத்துவதற்கு உதவுவதே மதம். இதையே மனிதனில் ஏற்கனவே உள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே மதம் என்று கூறினார் அவர். இவ்வாறு அகத்தே உள்ள ஆன்மாவை விழித்தெழச் செய்து, செயல்களில் ஈடுபடுபவன் எதையும் சிறப்பாகச் செய்ய முடியும். தனிமனிதன் சிறப்பாகச் செயல்படும்போது நாடு இயல்பாகவே முன்னேற்றம் காணும் என்பது சுவாமிஜியின் அடிப்படைக் கோட்பாடாக இருந்தது. நமது தாய்நாட்டின், அடிப்படையாகவும் முதுகெலும்பாகவும் அதன் தேசிய வாழ்க்கை முழுவதும் கட்டப்படுவதற்கான உறுதியான அடித்தளப் பாறையாகவும் மதமே உள்ளது. மதத்தின் வாயிலாக எல்லா வேலைகளும் நடைபெற வேண்டும் என்றெல்லாம் சுவாமிஜி கூறியபோது அவர் இந்த மதத்தையை குறிப்பிட்டார்.
Advertisement