FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
Year Ender

நம்பிக்கை தந்ததா கிளாஸ்கோ மாநாடு 2021?

இந்தாண்டு நடைபெற்ற கிளாஸ்கோ மாநாடு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறது.

Updated On : 28 டிசம்பர் 2021, 9:14 pm IST
நம்பிக்கை தந்ததா கிளாஸ்கோ மாநாடு 2021?
பகிர்:

புவி வெப்பமாதலால் ஏற்படும் காலநிலை பாதிப்புகளின் தீவிரத்தைக் குறைப்பது தொடர்பான பருவநிலை மாநாடு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில், இந்த ஆண்டின் (2021) அக்டோபர் முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை நடந்தது.

1995 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெறுகிறது. இதுவரை 6 மதிப்பீட்டு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதில் கிளாஸ்கோ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட மிகவும் முக்கிய விவாதப் பொருளாக ஆகியுள்ளது.

இதையும் படிக்க | லக்கிம்பூர் கலவரம்: வன்மம் கடந்துள்ள பாதை!

தொழிற்புரட்சிக்கு பின் ஏற்பட்ட அதிவிரைவான வளர்ச்சியும், அதன் உடல் விளைவாக அதிகரித்த பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றமும், புவியின் வெப்பநிலையில் தாக்கம் செலுத்தி, காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மனித வாழ்க்கைக்கு பொருள் உற்பத்தி மிகவும் அவசியம், ஆனால் அதற்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் சூழலியலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். இந்த எச்சரிக்கைக்கு உரிய கவனம் தராத பல நாடுகளின் போக்கினால், கடுமையான விளைவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்கிறது கிளாஸ்கோ மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அறிக்கை.

இனிமேல் உலகம் அடுத்தடுத்த பேரிடர்களுக்கு மத்தியில்தான் இருக்கப்போகிறது. மேலும், பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என இந்த மாநாடு அழைப்பு விடுத்தது. மேற்சொன்ன நோக்கத்தில் வெற்றியடையும் விதமாக மாநாடு அமைந்ததா என்பது கேள்விக்குறிதான்.

இதையும் படிக்க | 2021 - நடிகர்களின் ஆண்டு : காரணம் என்ன ?

Advertisement

Advertisement

நிலக்கரி உள்ளிட்ட மரபுசார் ஆற்றல் மூலங்களிலிருந்து மாற வேண்டும். புதிய ஆற்றல் மூலங்கள் மீது முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என்று இந்த மாநாடு விவாதித்தது.

அதீதமான அளவில் கார்பன் வெளியிடும் நாடுகளான அமெரிக்கா, சீனா இரண்டும் இந்த மாநாட்டில் செய்துகொண்ட கூட்டுப் பிரகடம் கவனிக்கத்தக்கது. உலகை மீட்கும் திசையில், தூரத்தில் தெரியும் வெளிச்சமாக, இந்த அறிக்கை பார்க்கப்படுகிறது. அதேவேளையில் கார்பன் வெளியீட்டைக் குறைக்க வளரும் நாடுகளுக்கு விதிக்கப்படும் வரம்புகளும், வளர்ந்த நாடுகளுக்கு விதிக்கப்படும் வரம்புகளும், சமனற்ற நிலையை எடுத்துக்காட்டுகின்றன.

2030ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் குறைப்பது என்பதை ஏற்றுக்கொண்டு 143 நாடுகள் உடன்படிக்கை ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் அந்த கால எல்லையை 2070 க்குள் என நிர்ணயித்துள்ளார்கள்.

ஏழை நாடுகளில் நிலவக்கூடிய வறுமையை ஒழிக்கவும், அதற்கேற்ற வளர்ச்சியை சாதிக்கவும் தற்போதுள்ள ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அந்த நாடுகளுக்கு புதிய ஆற்றல் மூலங்களை பயன்படுத்த தொழில்நுட்ப உதவியும், நிதி ஆதாரமும் தேவைப்படுகின்றன. வளர்ந்த நாடுகளிடம்தான் அதற்கான பொறுப்பும் கடமையும் உள்ளன. ஆனால் அது தொடர்பாக நம்பிக்கை தரும் வாக்குறுதிகள் எதுவும் இந்த மாநாட்டில் எழவில்லை.

பாரீஸில் நடந்த பருவநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை வளர்ந்த நாடுகள் கண்டுகொள்ளாத நிலையில் தற்போதைய கிளாஸ்கோ மாநாட்டில் விவாதிக்கப்பட்டவை குறித்து எந்தளவு தீவிரமாக அளவில் அவை செயல்பட உள்ளன என்கிற கேள்வி எழுகிறது.

உலக வானிலை மையம் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் காலநிலை மாற்றத்தால் கடந்த 1970 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 11,000 பேரிடர் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளதாகவும், இவற்றில் பலியான 20 லட்சம் மக்களில் 91 சதவிகிதத்தினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க | தமிழ் சினிமா 2021

காலநிலை மாற்ற பிரச்சனையை வளரும் நாடுகளே எதிர்கொள்ளவேண்டிய நிலை இருப்பதால், கூடுதலான கவனம் தேவை என்பதை அறிக்கை வழியுறுத்துகிறது.

உற்பத்தி முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது, புதிய ஆற்றல் மூலங்களை உருவாக்க தேவையான முதலீடுகளை அதிகப்படுத்துவது, ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வளர்ந்த நாடுகள் வழங்குவது, ஒருமித்த கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்டவையே காலநிலை பாதிப்பை சரிசெய்வதற்கான வழிமுறையாகும்.

அந்த விவாதத்தை உருவாக்கிய அடிப்படையில் கிளாஸ்கோ மாநாடு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. அதேசமயம் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட, உலக நாடுகள் உறுதியளித்த வாக்குறுதிகளை எந்தளவு உறுதியுடன் ஏற்றுநடத்துகிறது என்பதில் அடங்கியிருக்கிறது காலநிலை மாற்றத்திற்கு எதிரான வெற்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments