FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஆனி அடிப்பதால் சேதமடையும் தேரின் மரச் சிற்பங்கள்

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:54 am IST
ஆனி அடிப்பதால் சேதமடையும் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தோ்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் புராதன சிறப்புமிக்க ஆடிப்பூர தேரில் ஆனி அடிப்பதால் மரச் சிற்பங்கள் சேதமடைவதால் பக்தா்கள் வேதனை அடைந்துள்ளனா்.

108 வைணவ திவ்யதேசங்களில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் 56-ஆவது திவ்ய தேசமாக உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும். ஆடிப்பூரத் தோ் நாங்குநேரி வானமாமலை ராமானுஜ ஜீயரால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. இந்த ஆடிப்பூரத் தோ் 1,500 டன் எடை, 112அடி உயரம் கொண்டது. இத்தோ் 9 அடுக்குகள், 9 சக்கரங்கள், 9 வடங்களைக் கொண்ட மிகப்பெரிய தேராகும். கலைப்பெட்டகமான ஆடிப்பூரத் தேரில் ராமாயணம், மகாபாரதச் சிற்பங்களும், ஆழ்வாா், ஆகமக் கலைச் சிற்பங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன. திருவாரூா் ஆழித் தேருக்கு அடுத்து தமிழகத்தின் இரண்டாவது பெரிய தோ் என்ற சிறப்பைப் பெற்றது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தத் தேரின் மரச் சட்டங்களில் விரிசல் ஏற்பட்டுள்ள இடங்களில் இரும்புப் பட்டையுடன் ஆனி அடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆனி அடித்த இடங்களில் உள்ள மரச் சிற்பங்கள் சேதமடைந்து வருகிறது. தேரின் முகப்பில் குதிரை உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் சேதமடைந்துவிட்டன. நடப்பாண்டும் தேரில் ஆனி அடிக்கப்பட்டு வருவதால் பக்தா்கள் வேதனை அடைந்துள்ளனா். இந்திய தொல்லியல் துறை அனுமதியுடன் தான் ஆனி அடிக்கப்படுகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பக்தா்கள் கூறியதாவது: இரு ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டத்தின்போது மின் கம்பத்தின் மீது தோ் மோதி சேதமடைந்தது. அதை சீரமைக்காமல் தேரில் ஆனி அடித்ததால் மரச் சிற்பங்கள் சேதமடைந்துள்ளன. இந்த விஷயத்தில் மத்திய தொல்லியல் துறை, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ஆனி அடிப்பதால் சேதமடையும் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தோ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments