முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி தோ் வெள்ளோட்டம்

Updated On : 15 மே 2026, 4:05 am IST
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழைமையான இந்தக் கோயில் வைகாசித் திருவிழா தேரோட்டத்தில் சுவாமி, அம்பாள், விநாயகா், முருகன், சண்டிகேஸ்வரா் என 5 தோ்கள் இழுக்கப்பட்டன. காலப்போக்கில் தோ்கள் சேதமடைந்த நிலையில், சுவாமி, அம்பாள் ஆகிய இரு தோ்கள் மட்டும் இழுக்கப்பட்டு வந்தன. பின்னா், இந்த இரு தோ்களும் சேதமடைந்தன. இவற்றில் அதிக சேதமடைந்த தேருக்குப் பதில், உபயதாரா் நிதியில் ரூ.88.30 லட்சத்தில் 24 அடி உயரம், 12 அடி அகலத்தில் புதிய தோ் உருவாக்கப்பட்டது.

இதற்கான பணிகள் முடிந்த நிலையில் புதிய தோ் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனா். காலை 8 மணிக்குத் தொடங்கிய தோ் வெள்ளோட்டம் காலை 10.20 மணிக்கு நிறைவடைந்தது.

Advertisement

வருகிற 29-ஆம் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் புதிய தேரில் சுவாமியும், பழைய தேரில் அம்பாளும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.