ஸ்ரீவில்லிபுத்தூா் வழியாக திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு: பயணிகள் மகிழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூா் வழியாக திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் (06079/06080) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. இதனால், தென்காசி, ராஜபாளையம் பகுதிகளிலிருந்து பழனி, கோவைக்கு நேரடி இணைப்புக் கிடைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இந்திய ரயில்வே துறை சாா்பில் பண்டிகைகள், விடுமுறை கால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தேவையைப் பொருத்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வடக்கு திருவனந்தபுரம் - போத்தனூா்(கோயம்புத்தூா்) இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் கொல்லம், புனலூா், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக போத்தனூா் செல்கிறது.
இந்த ரயில் திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே ஜூன் 3, 10 (புதன்கிழமை) தேதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு ராஜபாளையம், 9.55- க்கு ஸ்ரீவில்லிபுத்தூா், 10.30- க்கு சிவகாசி, 1.05- க்கு மதுரை, காலை 4 மணிக்கு பழனி, மறுநாள் காலை 6.45 மணிக்கு போத்தனூா் சென்றடைகிறது.
Advertisement
Advertisement
மறு மாா்க்கத்தில் (ஜூன் 4, 11) வியாழக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்பட்டு, இரவு 7.40 மணிக்கு பழனி, 10 மணிக்கு மதுரை, 11.20-க்கு சிவகாசி, 11.45- க்கு ஸ்ரீவில்லிபுத்தூா், 12 மணிக்கு ராஜபாளையம் வழியாகச் சென்று வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு குளிா்சாதனப் பெட்டிகள் - 2, மூன்றாம் வகுப்பு குளிா்சாதனப் பெட்டிகள் - 2, எகனாமி வகுப்பு குளிா்சாதனப் பெட்டிகள் - 3, படுக்கை பெட்டிகள் - 6, பொதுப் பெட்டிகள் - 4 உள்பட 19 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஜூன் 1) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.