மனிதநேயர் மறைந்தார்!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் பழங்குடியினமான படுகர் குடும்பத்தில் பிறந்து மருத்துவரான என்.தோணன் அரசுப் பணி கிடைத்தவுடன் வேலூர் மாவட்டத்துக்கு வந்தார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் பழங்குடியினமான படுகர் குடும்பத்தில் பிறந்து மருத்துவரான என்.தோணன் அரசுப் பணி கிடைத்தவுடன் வேலூர் மாவட்டத்துக்கு வந்தார். இங்கு வேலூர், ஆம்பூர், குடியாத்தம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி, 2002-இல் ஓய்வு பெற்றார்.
பணியில் இருந்தபோதே குடியாத்தம் ஜி.பி.எம். தெருவில் கிளினிக் வைத்து, நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துவந்தார். தொடக்கத்தில் மூன்று ரூபாய் வாங்கியவர், அதிகபட்சமாக ரூ.10 வரையே வாங்கிவந்தார். ஏழைகள் என்றால், அதுவும் கிடையாது. மாத்திரைகளும் மருந்தும் இலவசம். கஷ்டப்படுபவர்களுக்கு வழிச்செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்புவதும் உண்டு.
எண்பத்து ஐந்து வயதிலும் சிகிச்சை அளித்து வந்த தோணன், கோத்தகிரியில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு ஜூலை 17-இல் சென்றவர் அங்கு மறைந்தார். இதேநேரத்தில் குடியாத்தத்தில் அவரது மறைவைக் கேட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், கோத்தகிரிக்குச் சென்று இறுதிஅஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement
சமூக வலைதளங்களில் நூற்றுக்கணக்கான பதிவுகள், ஆயிரக்கணக்கான இரங்கல் குறிப்புகள், நகரில் ஆங்காங்கே கண்ணீர் அஞ்சலி பதாகைகள்... என்று குடியாத்தம் பகுதி மக்கள் கண்ணீரில் மூழ்கினர். கோத்தகிரியில் ஜூலை 19-இல் அவரது இறுதிச் சடங்குகள் படுகர் சமூகத்தின் பாரம்பரிய கலாசார முறைப்படி நடைபெற்றன.
இதுகுறித்து நகர மக்கள் சிலரிடம் பேசியபோது:
'மருத்துவம் வணிகமாகிய காலத்திலும் தோணன் தனது ஆலோசனைக் கட்டணமாக ரூ.10 மட்டுமே பெற்றார். பலரிடம் அதையும் வாங்கவில்லை. 'கையில் பணம் இல்லையா? பரவாயில்லை... முதலில் உடம்பு சரியாகட்டும்...' என்று சிரித்தபடியே அனுப்பிவைப்பார். சில நேரங்களில் மருந்துகள் வாங்கவும் நோயாளிகளுக்குத் தனது சொந்தப் பணத்தையே கொடுத்துள்ளார். வாங்கிய சொற்ப கட்டணமும் எதற்கென்றால், அறைக்கான வாடகை, மின்கட்டணச் செலவுகளுக்குத்தான்.
அரசு மருத்துவராக இருந்தபோது, ஏழைகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகளை இரவு, பகலாகச் செய்துள்ளார். எண்பத்து ஐந்து வயதை எட்டியும் தோணன் மருத்துவச் சேவையை நிறுத்தவில்லை. தினமும் வெள்ளை கோட் அணிந்து மருத்துவமனைக்கு வருவார். நெற்றியில் விபூதியும் குங்குமமும் பூசி, இன்முகத்தோடு மருத்துவச் சேவை அளித்தார். வயது முதிர்ந்தாலும், அவரது சேவை மனப்பான்மை ஒருபோதும் குறையவில்லை' என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.