அழகும் அங்கீகாரமும்...
ஆடை வடிவமைப்பு என்பது கற்பனையும் கலைநயமும் தொழில்நுட்பமும் இணையும் அற்புதமான துறை. சரியான பயிற்சியும், அனுபவமும் இந்தத் துறைக்கு அவசியம்.
பொ.சோமன்
ஆடை வடிவமைப்பு என்பது கற்பனையும் கலைநயமும் தொழில்நுட்பமும் இணையும் அற்புதமான துறை. சரியான பயிற்சியும், அனுபவமும் இந்தத் துறைக்கு அவசியம். நாங்கள் அதனை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு வழங்கி, உலகத் தரம் வாய்ந்த ஃபேஷன் டிசைனர்களாக உருவாக்குகிறோம். கற்கும் ஆர்வமும் திறமையும் விடாமுயற்சியும் இருப்பவர்கள் இந்தத் துறையில் பிரகாசிக்கலாம்' என்கிறார் ஆடை அலங்கார நிபுணரும் ஆடை வடிவமைப்பாளருமான ரேகா ராம்குமார்.
சென்னை பள்ளிக்கரணையில் வசிக்கும் இவர் மாணவிகளுக்கு இலவசப் பயிற்சிகளை வழங்கிவருகிறார். பல பெண்களை தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறார். பல்வேறு விருதுகளைப் பெற்ற அவரிடம் பேசியபோது:
Advertisement
Advertisement
'என்னுடைய பூர்விகம், தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி. பள்ளி வாழ்க்கையை அங்குள்ள காமராஜர் பள்ளியில் தொடங்கினேன். 10-ஆம் வகுப்பு அரசுத் பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 200-க்கு 198 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் 2-ஆவது இடம் பிடித்தேன். திருப்பூர் நிஃப்டி கல்லூரியில் ஆடை வடிவமைப்பியல் பாடப் பிரிவில் ஓராண்டுப் படிப்பை முடித்தேன். கர்நாடகாவில் கணினி உதவியுடன் ஆடை வடிவமைப்பியலை முடித்தேன்.
இன்றைய உலகில் ஆடை என்பது வெறும் உடலை மறைக்கும் பொருளாக மடடுமல்லாமல், தனித்துவத்தையும், கலாசாரத்தையும், ஆளுமையையும் வெளிப்படுத்தும் முக்கியமான அடையாளமாக மாறியுள்ளது. அதனால் பேஷன் டிசைனிங் துறை உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
'படிப்பை முடித்துவிட்டு சும்மா இருக்கக் கூடாது' என்பதற்காக, எனது தாத்தாவின் பெயரில் இலவசப் பெண்கள் தையல் பயிற்சிக்கூடத்தை என் பெற்றோர் தொடங்கித் தந்தனர். அதில் பயிற்சி பெற்ற 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தையல் கடையையும், பயிற்சிக் கூடத்தையும் நடத்தும் அளவுக்கு வளர்ந்தனர். இது எனக்குப் பெருமையையும், மதிப்பையும் தேடித்தந்தது.
திருமண வாழ்க்கைக்குள் நுழைந்ததும், முதன் முதலாக நான் வாங்கிய தையல் இயந்திரத்தோடு, சென்னை திருவொற்றியூரில் வீட்டில் வைத்தே தையல் தொழிலை மீண்டும் தொடங்கினேன். அடுத்த சில ஆண்டுகளிலேயே பள்ளிக்கரணையில் குடியேறினேன். அங்கு 'ஸ்டைலிஸ்ட் பிரானா' என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆடை உருவாக்கத்தில் முழுமையான தொழில்முறைப் பயிற்சி இங்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் திறமையானவர்களை உருவாக்கி, அவர்களின் கனவுகளை நனவாக்கும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகிறேன்.
பாரம்பரியமும், நவீனமும் இணைந்த வடிவமைப்புகளே இன்றைய ஃபேஷன் உலகின் முக்கிய அடையாளம். கிராப் டாப் லெஹங்கா, இலகு ரக கோட், பெண்களுக்கான சூட்கள், இந்தோ-வெஸ்டர்ன் ஃபியூஷன் உடைகள் உள்ளிட்ட அனைத்தும் சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்படுவதால், வெளிநாட்டு சந்தையும் இலக்காகக் கொண்டு செயல்படுவதற்கான திறனைப் பெறுகிறார்கள்.
ஆடையின் தரத்தை நிர்ணயிப்பதில் துணியின் தரம் மிக முக்கியமானது. பருத்தி, பட்டு, லினன், ஜார்ஜெட், நெட் உள்ளிட்ட பல்வேறு துணி வகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து விரிவான பயிற்சி வழங்கப்படுகிறது. அளவீடுகளை சரியாக எடுத்துக் கொண்டு தொழில்முறை தரத்தில் பேட்டர்ன் உருவாக்கும் நுட்பங்கள் கற்பிக்கப்படுகின்றன. நவீன தையல் இயந்திரங்களைப் பயன்படுத்தி தரமான ஆடைகளைத் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளரிடம் செல்லும் முன் ஆடையின் தரம், தையல், அழகு, அலங்கார அம்சங்கள் அனைத்தும் முழுமையாகப் பரிசோதிக்கப்படுகின்றன. மாணவர்கள் உருவாக்கிய ஆடைகள் ஃபேஷன் ஷோ மூலம் பொதுமக்கள், நிபுணர்கள் முன் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் தன்னம்பிக்கை, மேடை அனுபவம், தொழில்முறை அறிமுகம் கிடைக்கிறது.
பேஷன் துறையில் வெற்றிபெற நல்ல மூலப்பொருள்கள், நம்பகமான உற்பத்தியாளர்கள் மிகவும் அவசியம். இதற்காக பஞ்சாப், கர்நாடகா போன்ற இந்தியாவின் முக்கிய ஜவுளி, ஆடை உற்பத்தி மையங்களில் நேரடி உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்படுகிறேன்.
தொழில் தொடங்குவது எப்படி, வாடிக்கையாளர்களை ஈர்ப்பது எப்படி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பிராண்டை வளர்ப்பது எப்படி, விலை நிர்ணயம், சந்தைப்படுத்தல், வணிக மேலாண்மை போன்ற பல்வேறு திறன்களும் எங்களிடம் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இந்துஸ்தான் கல்லூரியிடம் தரம், சிறந்த படைப்பாற்றல், சமூக சேவை போன்றவற்றுக்கு பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளோம். இதில் தேசிய அளவிலான அங்கீகாரமாக தில்லியில் நடைபெற்ற உலக ஆடை வடிவமைப்பு சங்கம் சார்பில் சிறந்த வடிமைப்பாளர் விருது பெற்றேன். இந்த விருது தரமான பயிற்சியை வழங்குவதற்கான அங்கீகாரமாகும்.
இத்துறை சார்ந்து படிப்பவர்களுக்கான வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முன்னணி ஆடை நிறுவனங்களில், ஏற்றுமதி நிறுவனங்களில் பணியாற்றலாம், திருமண மற்றும் சிறப்பு ஆடைகளை வடிவமைக்கலாம். சொந்த பிராண்டை உருவாக்கி, தொழில்முனைவோராக உயரலாம். தொழில் முனைவோர் பயிற்சி வழங்கலாம். இதுபோன்ற எண்ணற்ற வேலை வாய்ப்புகள் இத்துறையில் காத்திருக்கிறது' என்கிறார் ரேகா ராம்குமார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.