தைரியத்தை விதைத்தவள்!
பெரியதிரையில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் வரிசையில், நடிகை ஸ்வேதா பண்டேகரும் அடங்குவார்.
பெரியதிரையில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் வரிசையில், நடிகை ஸ்வேதா பண்டேகரும் அடங்குவார். இவர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், "சந்திரலேகா' தொடரில் சந்திரா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர். இவர் தன்னுடைய அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்:
திரைத்துறையை தேர்ந்தெடுத்தது எப்படி?
பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்காக காத்திருந்தேன். அந்த விடுமுறை நாட்களில்தான், ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு சின்ன வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசையிருந்தது. அதுபோன்று மேக்கப் செய்து கொள்வதிலும் ரொம்ப ஆர்வம். இதனால் வந்த விளம்பர பட வாய்ப்பை தவறவிடக் கூடாது என்று நடித்தேன். அதைத்தொடர்ந்து நிறைய விளம்பர படங்களில் நடிக்கத் தொடங்கினேன். அதன்மூலம் 2007-இல் பெரியதிரையில் நடிக்க வாய்ப்புகிடைத்தது. முதல் படமே "ஆழ்வார்' படத்தில் அஜித் சாருக்கு தங்கையாக நடிக்கும் கதாபாத்திரம். அதன்பிறகு 2008- இல் "வள்ளுவன் வாசுகி' என்ற படத்தில் கதாநாயகி அறிமுகமானேன்.
சின்னத்திரை வாய்ப்பு பற்றி?
பெரியதிரையில் அவ்வப்போது வாய்ப்புகள் கிடைத்ததே தவிர, பெரிய வெற்றியெல்லாம் கிடைக்கவில்லை. இதனால், ஒரு பிரேக் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனால், சினிமா இல்லாமல், நான் படித்த இன்ஜினியரிங் துறையில் ஏதாவது வேலைக்குப் போகலாம் என்று நினைத்தேன். அந்த சமயத்தில்தான், சின்னத்திரையில் வாய்ப்பு வந்தது. இது சரியா வருமா, வராதா என்று நிறைய குழப்பம். இருந்தாலும், சரி முயற்சி செய்துதான் பார்ப்போமே, செட் ஆகவில்லை என்றால், விலகிடலாம்னு நினைத்து கொண்டுதான் சீரியலில் நடிக்க ஆரம்பித்தேன். இப்போ எல்லார் வீட்டிலும் அவங்க வீட்டு பெண்ணாக மாறியிருக்கிறேன் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது?
வெளியிடங்களுக்கு போகும்போது, பெரும்பாலும் நான் மேக்கப் எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டேன். அப்படியிருந்தும் என்னை அடையாளம் கண்டு, "நீங்க சந்திரா தானேன்னு' வந்து பேசுகிறார்கள். நலம் விசாரிக்கிறார்கள். எங்க வீட்டுக்கு வாங்கன்னு சொந்த பந்தங்களை அழைப்பது போன்று கூப்பிடுகிறார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது, சந்தோஷமாக இருக்கிறது.
பொதுமுடக்கம் காரணமாக, "சந்திரலேகா' மறுஒளிப்பரப்பு ஆகிவருவது குறித்து?
ஆமாம், சந்திரலேகா தொடரை தற்போது மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்திருக்கிறேன், என்பதை திரும்பிப் பார்க்கும் வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. என்னோட பெஸ்ட் எப்படி கொடுத்திருக்கிறேன். நிறைய சொதப்பியிருக்கிறேன். இதுவெல்லாம் ஒரு பிளாஷ்பேக் போன்று இருக்கிறது. அப்போ பார்க்க முடியாமல் தவறவிட்ட பகுதிகளை மீண்டும் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது சந்தோஷமாக இருக்கிறது.
இத்தனை ஆண்டுகளில் சந்திரா கதாபாத்திரம் உங்களுக்குள் ஏற்படுத்திய மாற்றம் ஏதும் இருக்கிறதா?
நிச்சயமாக உண்டு. சந்திராவுக்கும், ஸ்வேதாவுக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஸ்வேதா ரொம்ப மென்மையானவள் பயந்த சுபாவம், யாரிடமாவது எதையாவது கேட்க வேண்டும் என்றாலும் ரொம்ப யோசிக்கிற கேரக்டர். ஆனால், சந்திரா அப்படியே நேர் எதிரானவள், ரொம்ப போல்ட். தவறு என்று தெரிந்தால் உடனே அதைத் தட்டிக் கேட்கிற கேரக்டர். 5 ஆண்டுகளாக இந்தக் கேரக்டராகவே வாழ்ந்து வருவதால், இப்போ உண்மையில், ஸ்வேதாவுக்கும் கொஞ்சம் தைரியம் வந்திருக்கிறது. இப்போது எல்லாம் கண்ணுக்கு முன்னால் ஏதாவது தப்பா இருந்தா, உடனே அதை எதிர்க்கணும். அப்போதான் இன்னொருமுறை அவங்க அதைச் செய்ய மாட்டாங்க என்று தோன்றுகிறது.
கோ-ஆர்ட்டிஸ்ட் பற்றி?
சந்திரலேகா செட்டே ரொம்ப ஜாலியான டீம். அதிலும் நான், லேகா, சபரி எல்லாம் எப்போதும் ஜாலியா எதையாவது செய்துக்கிட்டே இருப்போம். எங்களை கன்ட்ரோல் செய்வதே அவங்களுக்குப் பெரிய வேலையா இருக்கும்.
அடுத்த இலக்கு?
அடுத்த இலக்கு என்பது எல்லாம் எதுவும் கிடையாது. இப்போதைக்கு சந்திராவாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து வாழ்க்கை என்னை எப்படி அழைத்துப் போகுதோ அதனுடன் பயணிக்க வேண்டும். அந்தப் பயணத்தில் என்னால், முடிந்த பெஸ்ட் என்னவோ அதை கொடுப்பேன்.
சந்திரலேகாவில் மறக்கமுடியாத காட்சி?
ஒரு தொடரை பொருத்தவரை, எல்லா காட்சிகளுமே ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் செய்கிறோம். அதனால் எல்லாமே நினைவில் இருக்கும். அதில் மறக்கமுடியாத காட்சி என்று குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நிலா கேரக்டர் செய்யும்போது, அந்த பாஷை பேசுவதற்கு சிரமப்பட்டு, ஹோம்வொர்க் எல்லாம் செய்தது மறக்கமுடியாது.
வரும் காலங்களில் தொடரில் என்ன மாதிரியான விஷயங்களை எதிர்பார்க்கலாம்?
பொது முடக்கத்துக்கு முன்னாடி தொடர் நல்ல விறுவிறுப்பாக போய்க்கிட்டு இருந்தது. லேகா வேற நல்லவளாக மாறிவிட்டாள். திரும்ப கெட்டவளா மாறுவாளா என்று தெரியவில்லை. இதைத் தவிர பவானின்னு புது கேரக்டர் வேறு கதையில் வந்துள்ளது. அவங்க நல்லவங்களா, கெட்டவங்களா என்பதெல்லாம் இன்னும் தெரியல. இந்நிலையில், நிறைய மாற்றங்கள், டிவிஸ்ட்களுடன் மீண்டும் "சந்திரலேகா' ஒளிப்பரப்பாகவுள்ளது. அதையெல்லாம் பொருத்திருந்து தான்பார்க்க வேண்டும்.