ஆசிரியைகள் மட்டும்!
சென்னை கொடுங்கையூரில் உள்ள முத்தமிழ் நகரில் தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைத் தொடங்கி, கடந்த 40 ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்விச் சேவை அளித்து வருகிறார் ஞானாம்பிகை மதியழகன்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள முத்தமிழ் நகரில் தூய இருதய (சேக்ரட் ஹார்ட்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைத் தொடங்கி, கடந்த 40 ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்விச் சேவை அளித்து வருகிறார் ஞானாம்பிகை மதியழகன். இந்தப் பள்ளியின் தாளாளராகவும், முதல்வராகவும் பொறுப்பு வகித்து வரும் இவர், அரசின் சலுகைகளைச் சாராமல் பின்தங்கிய பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வியறிவை வழங்கி வருகிறார். பள்ளி தொடங்கியது முதல் இன்றுவரையில் இப்பள்ளியில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.
அவரிடம் பேசியபோது:
மாணவர்கள் மீது கொண்டிருந்த அளவற்ற அன்பால் கல்வித் துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 1988-ஆம் ஆண்டில் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 4-வது பிளாக்கில் உள்ள ஒரு வீட்டைப் பள்ளியாக மாற்றினேன். பின்தங்கிய பகுதியில் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடக்கப் பள்ளியாகத் தொடங்கினேன். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், 1991-ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தினேன். தற்போது பள்ளியில் சுமார் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதுவரையில் பல ஆயிரம் மாணவர்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
Advertisement
Advertisement
கொடுங்கையூரில் தொழிலாளர்கள், ஏழைகள் அதிகம்பேர் வசிக்கின்றனர். எனவே எங்கள் பள்ளியில் மிகக் குறைந்த கல்விக் கட்டணமே வாங்கப்படுகிறது. ஆண்டுக்கு 25 சதவீத மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கிறோம். மேலும் 10-ஆம் வகுப்பு , பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மாணவர்களுக்கு அறநெறிகளைப் போதிப்பதுடன், பள்ளியில் அவர்களை ஒழுக்கக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறோம். மாணவர்களுக்கு கல்விக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதுடன் தொழில் நுட்ப அறிவையும் போதிக்கிறோம்.
எனது மகன், மகளை நன்கு வளர்த்து, இருவரையும் மருத்துவர்களாக்கி உள்ளேன். கல்விச் சேவையுடன் குடும்பப் பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறேன்.
இளம் வயதில் தொடங்கிய கல்விப் பயணம், இன்று நாற்பது ஆண்டுகளைக் கடந்துள்ளது. எழுபத்து ஐந்து வயதிலும், நானே பள்ளி நிர்வாகத்தை நேரடியாக மேற்கொள்கிறேன். தினமும் பள்ளிக்கு வந்து மாணவர்களுடன் அன்பாகப் பழகி, அவர்களின் கல்விக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறேன். இதனால் நான் ஆசிரியர்கள், மாணவர்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றுள்ளேன்'' என்றார்.
அவர் குறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், பள்ளித் தாளாளரும் முதல்வருமான ஞானாம்பிகை மதியழகன் மிகவும் அன்பானவர். மாணவ, மாணவியர், ஆசிரியர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். கல்வி என்பது வெறும் பாடப்புத்தக அறிவை வழங்குவது மட்டுமல்ல; மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதாகும். இப்பள்ளியில் படித்த மாணவர்கள் அரசு, தனியார் துறையில் சிறந்த பணியில் உள்ளனர். அந்த வகையில், நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கல்விச் சேவையாற்றி வருகிறார்'' என்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.