சர்வதேச விழாக்களில் கவனம்
கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ' நாங்கள்'.
கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ' நாங்கள்'.
திரைப்படக் கல்லூரியில் முறையாக படத்தொகுப்பு, திரைக்கதை அமைப்பு மற்றும் இயக்கம் உள்ளிட்டவற்றை பயின்று எண்ணற்ற விளம்பரப் படங்களில் பணியாற்றி இருக்கும் அவினாஷ் பிரகாஷ் இயக்குநராக அறிமுகமாகிறார்.
வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இப்படத்தில் லைவ் சவுண்ட் முறை கையாளப்பட்டுள்ளது. மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் இப்படம் ராட்டர்டாம், மோஸ்ட்ராபாவ்லோ, ஜியோ மாமி, மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது... 'பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் மிகவும் கண்டிப்பான தந்தையிடம் வளரும் மூன்று குழந்தைகள் வாழ்க்கையை எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பது தான் கதைக்கரு. படம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருப்பதாக இதுவரை பார்த்த அனைவரும் மனமார பாராட்டி இருக்கிறார்கள். மிதுன் வி, ரித்திக் எம், நிதின் டி ஆகியோர் மூன்று குழந்தைகளாக நடிக்க, அப்துல் ரஃபே மற்றும் பிரார்த்தனா எஸ் அவர்களின் பெற்றோராக நடித்துள்ளனர்.
முக்கிய பாத்திரத்தில் ராக்ஸி எனும் நாய் அற்புதமாக நடித்துள்ளது. வேத் ஷங்கர் சுகவனம் இசையில் சுஜாதா நாராயணன் பாடல் வரிகளில் சைந்தவி பாடியுள்ள கனவே எனும் உள்ளத்தை தொடும் பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது' என்றார்.