கவலைகள் குறைக்கும் காபி!
குறிப்பிட்ட நேர இடைவெளியில் தினமும் காபி அருந்துவதால், நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்கள் பெருகுகின்றன.
'குறிப்பிட்ட நேர இடைவெளியில் தினமும் காபி அருந்துவதால், நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்கள் பெருகுகின்றன. இதனால் மனிதர்களின் மூளைச் செயல்பாடுகள் மேம்பாடு அடைகிறது. மனச்சோர்வு, மன உளைச்சல் குறைவதோடு, புரிதலும் மேம்படுகிறது' என்று அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர் பேராசிரியர் ஜான் கிரையன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்த ஆய்வு விவரங்கள் 'நேட்சர் கம்யூனிகேஷன்ஸ்' இதழில் வெளியாகியுள்ளது.
அயர்லாந்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் 62 பேர் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் காபி அருந்துபவர்களாகவும், 31 பேர் காபி அருந்தாதவர்களாகவும் இருந்தனர். இவர்களிடம் உயிரியல் எச்சங்கள் (மலம், சிறுநீர்) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
காபி அருந்துபவர்கள் நாளொன்றுக்கு மூன்று முதல் ஐந்து முறை அருந்துவோராக இருந்தனர். ஆய்வின் தொடக்கத்தில், காபி குடிப்பவர்கள் இரண்டு வாரத்துக்கு காபியை நிறுத்தி விட்டனர். அப்போது, அவர்களுடைய உயிரியல் எச்சங்களும், மன நலமும் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன.
Advertisement
Advertisement
காபி அருந்தாத இடைவெளியில் அவருடைய உடலில் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியில் தடுமாற்றம் ஏற்பட்டது. மனநலமும் சிக்கலை அடைந்தது. பின்னர், அவர்களைத் தினமும் காபியைக் குடிக்கவைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஒரு குழுவுக்கு கேஃபைன் கலந்த காபியும், மற்றொரு குழுவுக்கு கேஃபைன் கலக்காத காபியும் அளிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் எந்த வகையான காபி அருந்துகிறோம் என்பது தெரியாது. பின்னர், இவர்களுடைய உயிரியல் எச்சங்களை ஆய்வு செய்தபோது, நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பெருகியுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். இதுதவிர, இவர்களுக்கு மன உளைச்சலும் மனச்சோர்வும் இல்லாமல் உலவியதும் தெரியவந்தது.
கேஃபைன் கலக்காத காபி அருந்தியோர் நினைவாற்றலிலும், கற்றலிலும் மேம்பாடு அடைந்திருந்தனர். கேஃபைன் கலந்த காபியை அருந்தியோரிலும் கவலைகள் குறைந்து கவனக்குவிப்புடையோராகத் திகழ்ந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.