FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்மணி

இரட்டைச் சொற்கள்!

கார சாரம்: காரம் என்பது உறைப்புச் சுவை. சாரம் என்பது சார்ந்தது - காரத்தைச் சார்ந்த புறச் சுவைகள். 

Updated On : 25 ஏப்ரல் 2021, 9:08 pm IST
பகிர்:

சென்றவாரத் தொடர்ச்சி...


கார சாரம்: காரம் என்பது உறைப்புச் சுவை. சாரம் என்பது சார்ந்தது - காரத்தைச் சார்ந்த புறச் சுவைகள். 

இசகு பிசகு: இசகு என்பது தம்மியல்பு தெரிந்து ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல். பிசகு என்பது தம்முடைய அறியாமையால் ஏமாறுதல். இடக்கு முடக்கு: இடக்கு என்பது எள்ளி நகைத்தும் இகழ்ந்தும் பேசல். முடக்கு என்பது கடுமையாக எதிர்த்தும், தடுத்தும் பேசல். தோட்டம் துரவு: தோட்டம் என்பது செடி, கொடி, கீரை போன்றவை பயிரிடப்படுமிடம். துரவு என்பது கிணறு.

Advertisement

Advertisement

சத்திரம் சாவடி: சத்திரம் என்பது இலவசமாக சோறு போடுமிடம். சாவடி என்பது இலவசமாகத் தங்கும் விடுதி. 

பற்று பாசம்: பற்று என்பது நெருக்கமாக உறவாடுதல். பாசம் என்பது பிரிவின்றி சேர்ந்தே இருத்தல். பழக்க வழக்கம்: பழக்கம் என்பது ஒருவர் ஒரு செயலைப் பலகாலம் செய்து வருதல். வழக்கம் என்பது ஒரு செயலைப் பலகாலம் மரபாகக் கடைப்பிடித்தல்.

கிண்டலும் கேலியும்: கிண்டல் என்பது ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயிலிருந்து பிடுங்கி வரவழைத்தல். கேலி என்பது எள்ளி நகையாடுதல்.

பட்டி தொட்டி: பட்டி என்பது மிகுதியாக ஆடுகள் வளர்க்கும் ஊர். தொட்டி என்பது மாடுகள் மிகுதியாக வளர்க்கும் ஊர்.

பேரும் புகழும்: பேர் (பெயர்) என்பது வாழும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும். புகழ் என்பது வாழ்வுக்குப் பிறகு நிலைபெற்றிருக்கும் பெருமை. 
நேரம் காலம்: நேரம் என்பது ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைந்த பொழுது. காலம் என்பது ஒரு செயலைச் செய்வதற்குப் பஞ்சாங்க அடிப்படையில் எடுத்துக் கொள்ளும் கால அளவு. 

பழி பாவம்: பழி என்பது நமக்குத் தேவையில்லாத, பொருந்தாத செயலைச் செய்ததால் இப்பிறப்பில் உண்டாகும் பழிச்சொல். பாவம் என்பது தீய செயல்களைச் செய்ததால் மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் தீய (தீவினை) நிகழ்வு.

நகை நட்டு: நகை என்பது பெரிய அணிகலன்களைக் குறிக்கும். நட்டு என்பது சிறிய அணிகலன்களைக் குறிக்கும். வாட்ட சாட்டம்: வாட்டம் என்பது வளமான தோற்றம். வாளிப்பான உடல், அதற்கேற்ற உயரம். சாட்டம் என்பது வளமுள்ள கனம்- தோற்றப் பொலிவு.

காய் கறி: காய் என்பது காய் வகைகள். கறி என்பது சைவ உணவில் பயனாகும் கிழங்கு கீரை வகைகள். 

கால்வாய் - வாய்க்கால்: வாய் என்பது குளம். கால்வாய் குளத்திற்கு நீர் வரும் கால் (வழி). வாய்க்கால் என்பது குளத்திலிருந்து தண்ணீர் செல்லும் கால் (வழி).

ஈவு இரக்கம்: ஈவு என்பது கொடை வழங்குதலைக் குறிக்கும். இரக்கம் என்பது பிறவுயிர்கள் மேல் அருள் புரிதலைக் குறிக்கும்.

பொய்யும் புரட்டும்: பொய் என்பது உண்மையற்றவற்றைக் கூறுதல். புரட்டு என்பது ஒன்றை நேருக்கு மாறாக மாற்றி உண்மை போலவே நம்புமாறு கூறுதல்.

சூடு சொரணை: சூடு என்பது ஒருவர் தகாத சொல்லைப் பேசும்போது - தகாத செயலைச் செய்யும்போது ஏற்படும் மனக்கொதிப்பு. சொரணை என்பது நமக்கு ஏற்படும் மான உணர்வு.

இவை போன்று தமிழில் இன்னும் நிறைய இரட்டைச் சொற்கள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments