முகப்பு
உலகம்

இது என் கடமை.. காஸாவில் குடும்பத்தினரை இழந்த மறுநாள் பணிக்கு வந்த செய்தியாளர்

இஸ்ரேல் தாக்குதலில் தனது மனைவி, மகன் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 12 இழந்த அல் ஜஸீரா செய்தியாளர்,  மறுநாளே பணிக்குத் திரும்பி செய்திகளை வழங்கத் தொடங்கியிருக்கிறார்.

Updated On : 27 அக்டோபர் 2023, 5:49 pm IST
பகிர்:

இஸ்ரேல் தாக்குதலில் தனது மனைவி, மகன் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 12 இழந்த அல் ஜஸீரா செய்தியாளர்,  மறுநாளே பணிக்குத் திரும்பி செய்திகளை வழங்கத் தொடங்கியிருக்கிறார்.

அல் ஜஸீரா ஊடகத்தின் காஸா பிரிவு செய்தியாளர்வெல் அல் தஹ்தோ, தனது மனைவி, மகன்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை இஸ்ரேல் தாக்குதலில் இழந்துள்ளார்.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய பலமுனைத்தாக்குதலைத் தொடர்ந்து, காஸா மீது இஸ்ரேல் போரைத் தொடங்கியது. இதனால், ஒட்டுமொத்த காஸா நகரமே நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கத்தாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அல் ஜஸீரா செய்தி ஊடகத்தின் காஸா பிரிவு செய்தியாளர் வெல் அல் தஹ்தோவின் மனைவி, மகன்கள், மகள் என 4 பேர் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகியுள்ளனர்.

நுசைரத் அகதிகள் முகாமில் தங்கியிருந்தபோது, அப்பகுதியில் நடந்த குண்டுவீச்சுத் தாக்குதலில் அனைவரும் பலியானதாகவும், இந்த தாக்குதலில், தஹ்தோவின் பேரனும் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஸாவிலிருந்து செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த தஹ்தோவுக்கு இந்தச் செய்தி கிடைத்ததும், மருத்துவமனைக்கு வந்து தனது குடும்பத்தினரின் உடல்களைப் பார்த்துக் கதறி அழுதார். அப்போதும் அவர் ஊடகம் என்ற வார்த்தைப் பொறித்த மேலாடையை அணிந்திருந்ததைப் பலரும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

இதற்கெல்லாம் மேலாக, அவர் தனது குடும்பத்தை இழந்த மறுநாளே காஸாவிலிருந்து போர் நிலவரங்கள் தொடர்பான செய்திகளை வழங்கத் தொடங்கியிருக்கிறார். இது குறித்து அவர் பேசும் விடியோ அல் ஜஸீரா எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அவர் இவ்வாறு கூறுகிறார், எனது துக்கத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த உயிரிழப்புகளுக்காக நீங்கள் செய்த கண்டனங்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறன்.

அவர்கள் எனக்கு மிகவும் வேண்டியவர்கள். ஆனால், மற்ற எதையும் விட, நான் பணிக்கு எவ்வளவு விரைவாகத் திரும்புகிறேனோ அது மிக மிக முக்கியம். நீங்களே பாருங்கள், எங்குப் பார்த்தாலும் வெடிகுண்டுகள் வீசப்படுகின்றன. ஆங்காங்கே வான்வழித் தாக்குதலும், ஆர்டிலெரி குண்டுகளும் வீசப்படுகின்றன. இது தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இதனால்தான், நான் பணிக்குத் திரும்ப வேண்டியது அவசியம் என கருதினேன். வலியும், காயத்தையும் புறந்தள்ளிவிட்டு பணிக்கு வந்து, இப்போது கேமரா முன்பு நின்றுகொண்டிருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடிகிறதோ, அவ்வளவு விரைவாக உங்களுடன் சமூக ஊடகங்கள் வாயிலாக பேசுகிறேன் என்றார். தயவுசெய்து உங்கள் பிரார்த்தனைகளைத் தொடருங்கள். அமைதி நிலவட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

நன்றி - புகைப்படம் அல் ஜஸீரா டிவிட்டர் பக்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.