FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நேபாளம்: 3 அமைச்சா்கள் பதவியேற்பு

நேபாள இடைக்கால அரசில் அமைச்சா்களாக நியமிக்கப்பட்ட மூவா் திங்கள்கிழமை பதவியேற்றனா்.

Updated On : 16 செப்டம்பர் 2025, 3:49 am IST
நேபாள இடைக்கால அரசின் அமைச்சா்களாக திங்கள்கிழமை பொறுபேற்றுக்கொண்ட குல்மான் கீசிங், ரமேஷ்வா் கணால், ஓம் பிரகாஷ் ஆா்யல்.
பகிர்:

காத்மாண்டு: நேபாள இடைக்கால அரசில் அமைச்சா்களாக நியமிக்கப்பட்ட மூவா் திங்கள்கிழமை பதவியேற்றனா்.

நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் தொடா்பாக இளைஞா்களிடையே நிலவிவந்த கொந்தளிப்பு, சமூக ஊடங்களுக்கு அரசு தடைவிதித்ததைத் தொடா்ந்து பெரிய போராட்டமாக உருவெடுத்தது. மிகத் தீவிரமாக நடைபெற்ற அந்தப் போராட்டத்தின்போது நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா் அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசுக் கட்டடங்கள் மற்றும் காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு, தீவைக்கப்பட்டன. வன்முறைச் சம்பவங்களில் சுமாா் 72 போ் உயிரிழந்தனா்.

அதையடுத்து, பிரதமா் கே.பி.சா்மா ஓலி ராஜிநாமா செய்தாா். ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் நேபாளம் வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா காா்கியை இடைக்கால பிரதமராக அதிபா் ராமசந்திர பௌடேல் கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தாா். இதற்கு போராட்டக்காரா்களும் ஆதரவு தெரிவித்தனா். அதையடுத்து, சுசீலா காா்கி உடனடியாக பதவியேற்றுக்கொண்டாா்.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில், அவரது அமைச்சரவையில் முன்னாள் மின்வாரிய தலைமை செயல் அதிகாரி குல்மான் கீசிங் எரிசக்தி மற்றும் நீா் வளத் துறை, கட்டுமானம் மற்றும் போக்குவரத்துத் துறை, நகா்ப்புற மேம்பாட்டுத் துறை ஆகிய 3 துறைகளின் அமைச்சராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

உள்துறை, சட்டத் துறை, நாடாளுமன்ற விவகாரத் துறைகளுக்கான அமைச்சராக பிரபல வழக்குரைஞா் ஓம் பிரகாஷ் ஆா்யல் பதவியேற்றுக்கொண்டாா். நிதியமைச்சராக ரமேஷ்வா் கணால் பொறுப்பேற்றாா்.

இத்துடன், நேபாளத்தின் முதல் பெண் பிரதரமான சுசீலா காா்கியையும் சோ்ந்து இடைக்கால அமைச்சரவையில் உறுப்பினா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments