டிரம்ப்பின் விமர்சனங்களுக்கு இடையே அமெரிக்கா செல்கிறார் பிரிட்டன் மன்னர்! என்ன காரணம்?
பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்காவுக்குச் செல்வது குறித்து...
பிரிட்டன் நாட்டின் மன்னர் மூன்றாம் சார்லஸ், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அமெரிக்காவுக்குச் செல்வதாக, பக்கிங்காம் அரண்மனை செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) அன்று அறிவித்துள்ளது.
இந்தப் பயணமானது அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு வரும் ஏப். 27 முதல் ஏப். 30 ஆம் தேதி வரையில் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, ஈரான் மீதான போரில் அமெரிக்க போர் விமானங்கள் தங்களது விமானத் தளங்களைப் பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை பகிரங்கமாக அதிபர் டிரம்ப் விமர்சித்து வருகிறார்.
இதையடுத்து, பிரிட்டன் குறித்து அதிபர் டிரம்ப்பின் விமர்சனங்களால் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் அமெரிக்க பயணத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஏராளமான உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
பிரிட்டனில் தேர்ந்தெடுக்கப்படும் அரசின் வேண்டுகோளை ஏற்று மன்னர் மற்றும் ராணி வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது வழக்கமாகவுள்ளது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் அரசு முறைப் பயணமாக பிரிட்டன் நாட்டுக்குச் சென்றிருந்தார். மேலும், டிரம்ப்பின் பிரிட்டன் பயணத்தில் அரசக்குடும்பத்தின் மரபுகளை அவர் வேண்டுமென்றே மீறியதாகக் கூறி கண்டனங்கள் எழுந்தன.
மேலும், மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது வாழ்நாளில் இதுவரை 19 முறை அமெரிக்காவுக்குப் பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.