ஈரானின் ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும்! - அமெரிக்கா எச்சரிக்கை!
ஈரானின் ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பேச்சு...
ஈரானிடம் உள்ள ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகள் வரை பாய்ந்து தாக்குதல் நடத்தும் திறன் வாய்ந்தவை என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அந்நாடுகளின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இத்துடன், சர்வதேச அளவில் எரிசக்தி ஏற்றுமதிகளுக்கு முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானின் படைகள் முடக்கியுள்ளன. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஈரான் சமீபத்தில் பயன்படுத்திய ஏவுகணைகள் அந்நாட்டின் தலைமையால் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்த ஆயுதத் திறன்களை வெளிப்படுத்துவதாகவும், அந்த ஏவுகணைகளால் ஐரோப்பிய நாடுகள் வரையில் பாய்ந்து தாக்குதல் நடத்த முடியும் எனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
”அமெரிக்காவின் நிலப்பரப்பை அடையும் நோக்கில் அவர்கள் (ஈரான்) ஏவுகணைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரானின் அதிநவீன ஆயுதங்களின் உருவாக்கம் மற்றும் அணுசக்தித் திட்டம் ஆகியவற்றை தடுப்பதற்காகவே அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே அமெரிக்கா பேச்சுவார்த்தைகளுக்குத் தயார். அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை விடவும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவே விரும்புகிறார்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் போர் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
Marco Rubio has stated that the missiles possessed by Iran are capable of launching attacks against Europe.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.