ஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற ஆர்வலரின் உடல்நிலை கவலைக்கிடம்!
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நோபல் பரிசு பெற்ற ஆர்வலர் நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்...
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆர்வலர் நர்கிஸ் முகமதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனித உரிமை ஆர்வலர் நர்கிஸ் முகமதிக்கு (வயது 53) கடந்த மார்ச் 24 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சுமார் 1 மணிநேரம் அவருக்கு முதலுதவி எதுவும் அளிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நர்கிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் உடல் எடைக்குறைந்து வலுவிழந்துள்ளதாகவும், கடந்த புதன்கிழமை (ஏப். 15) அன்று நர்கிஸ் முகமதியின் அமைப்பு அறிவித்துள்ளது.
Advertisement
முன்னதாக, மர்மமான முறையில் உயிரிழந்த மற்றொரு மனித உரிமை ஆர்வலரான கோஸ்ரோ அலிகோர்டி என்பவருக்காக, கடந்த 2025 டிசம்பரில் மஷாத் நகரத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நர்கிஸ் முகமதி ஈரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, நர்கிஸின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே, கடந்த 2023 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அவர் சிறையிலிருந்தபடியே பெற்றது குறிப்பிடத்தக்கது.