ஈரான் தலைநகரில் நாளை முதல் மீண்டும் சர்வதேச விமானங்கள் இயக்கம்!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவது குறித்து...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சனிக்கிழமை (ஏப். 25) முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் மீது கூட்டுத் தாக்குதல்கள் மேற்கொண்டன. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையில் போர் தொடங்கியதால், ஈரானின் வான்வழிப் பாதைகள் முழுவதுமாக முடக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில், ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள இமாம் கொமேனி விமான நிலையத்தில் இருந்து வரும் சனிக்கிழமை முதல் சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்மூலம், முதற்கட்டமாக தெஹ்ரானில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் மற்றும் ஓமனின் மஸ்கட் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
ஏற்கெனவே, ஈரானின் வடகிழக்கு நகரமான மஷ்ஹதின் விமான நிலையத்தில் இருந்து துருக்கி மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பிராந்தியத்தில் பதற்றமான சூழல் தொடர்வதால், இந்தியர்கள் யாரும் ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம் என தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.