2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் செல்வதாகத் தகவல்...
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விரைவில் பாகிஸ்தான் நாட்டுக்குச் செல்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதையடுத்து, ஏப். 7 அன்று இருதரப்புக்கும் இடையே 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் கொண்டு வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான பிரதிநிதிக் குழுக்கள் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டு வருகின்றது. இதற்காக, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்குச் சென்றிருந்தார்.
இந்த நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வரும் வார இறுதியில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானிய அமைச்சர் அராக்ச்சியின் இந்தப் பயணம் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான நடவடிக்கையாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.