பருவநிலை மாற்றத்தால் பொழியும் கனமழை... சோலை வனமாகும் ஈரான்! அமெரிக்க ரேடார்கள் அழிப்பு காரணமா?
அமெரிக்காவின் ரேடார்கள் தாக்கி அழிக்கப்பட்டதால், ஈரானில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு மழை பொழிவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் தகவல்களைப் பற்றி...
அமெரிக்காவின் ரேடார்கள் தாக்கி அழிக்கப்பட்டதால், ஈரானில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு மழை பொழிவு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த பிப். 28 ஆம் தேதி ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதனால், அமெரிக்காவுக்கு ஆதரவளித்த வளைகுடா நாடுகள் மீது ஈரான் புரட்சிகர காவல்படை கடுமையான தாக்குதல் நடத்தியது.
சுமார் 35 நாள்களுக்கு மேல் நடைபெற்ற போர் கடந்த ஏப். 8 ஆம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், இரண்டு வார போர்நிறுத்தம் அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை நீட்டிப்பு செய்தார். போர்நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Advertisement
ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவின் போர் விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைகள் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்காவின் வானிலையை கட்டுப்படுத்தும் ரேடார் ஒன்றை ஈரானிய ராணுவம் வீழ்த்தியதாக தகவல் ஒன்று வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்த ரகசிய வானிலை மாற்ற மையத்தை ஈரான் அழித்ததால், ஈரானில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரேடார்கள் செயலிழந்த அடுத்த 72 மணிநேரத்திற்குள் கனமழைப் பொழிந்ததாகவும், கடந்த ஏழு ஆண்டுகளாக வறண்டு கிடந்த இராக்கின் தார்பந்திகான் அணை நிரம்பி முழுக் கொள்ளளவை எட்டியது. வறண்டுபோகும் நிலையில் இருந்த நைப் அணையும் 22 சதவிகிதம் நிரம்பிக் காட்சியளிக்கின்றது.
நம்பத்தகுந்த வட்டாரங்களின் தரவுகளின்படி, மத்திய கிழக்கு நாடுகளான இராக்கிலும் ஈரானிலும் ஒவ்வொரு வாரமும் திடீரென கனமழை பெய்து வருகிறது. வெப்பநிலை முழுமையாக 5 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. ஈரானின் பேரழிவுக்கு காரணமான வறட்சி முடிவுக்கு வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்த அந்த மையம் ஈரானை பாலைவனமாக மாற்றி கால்நடைகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோக்கி அமைக்கப்பட்டது என்றும் எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். ஈரான் நீண்ட ஆண்டுகளாகவே தண்ணீர் பற்றாக்குறையுடன் போராடி வருகிறது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகாலமாக வறட்சி காரணமாக, “தண்ணீர் திவால்” என்ற நிலையையும் எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சில ஆண்டுகளாக விவசாயிகள் பலரும் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கத்தாரில் உள்ள தாட்(THAAD) ஏவுகணைப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ரேடார் உள்ளிட்ட அமெரிக்க ராணுவ அமைப்புகள் ஈரான் ராணுவத்தால் தாக்கி அழிக்கப்பட்டன.
இதுதொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தது மேக விதைப்பு கருவிகள். இவை ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமே மழைப்பொழிவைக் கட்டுப்படுத்த இயலும். ஆனால், தொலைவில் இருக்கும் இடங்களில் வானிலையைக் கட்டுப்படுத்த முடியாது” என்றும் கூறுகின்றனர்.
நீண்ட நாள் வறட்சிக்குப் பின்னர் பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எதுவாயினும், அதிகளவிலான மழைப்பொழிவால் ஈரானின் பல பகுதிகளில் ஆறுகள், நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.