எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் பிறருக்கும் தனக்குத்தானேவும் அனுப்பிய மின்னஞ்சல்கள், காவல்துறை விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அடங்கிய 35 லட்சம் பக்கங்கள் கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், பில்கேட்ஸ் குறித்து எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிக் கொண்ட மின்னஞ்சல் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
ஜூலை 18, 2013 தேதியிட்ட மின்னஞ்சலில், ”ரஷிய பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதால் பில்கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோயை குணப்படுத்தும் மருந்தை அப்போதைய மனைவி மெலிண்டாவுக்கு தெரியாமல் அனுப்புமாறு பில்கேட்ஸ் கூறினார்.
மெலிண்டாவுக்கும் பால்வினை நோய்த் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவருக்கு தெரியாமலேயே உணவில் மருந்தை கலக்க என்னிடம் உதவி கோரினார்” என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
பில்கேட்ஸ் விளக்கம்
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துவதாகவும், மன்னிப்புக் கோருவதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஆங்கில ஊடகத்துக்கு புதன்கிழமை பேட்டியளித்த பில்கேட்ஸ் தெரிவித்ததாவது:
“எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் போலியானது. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் என் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு முதல்முறையாக எப்ஸ்டீனைச் சந்தித்தேன். அதன்பிறகு மூன்று ஆண்டுகளில் பலமுறை அவருடன் இரவு விருந்தில் கலந்துகொண்டேன். ஆனால், அவருடைய கரீபியன் தீவுக்கு ஒருபோது சென்றதில்லை, பெண்களுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.
பில்கேட்ஸ் முன்னாள் மனைவி
அமெரிக்காவின் ஊடகத்துக்கு பில்கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா அளித்த பேட்டியில், “எப்ஸ்டீன் கோப்புகள் எனது திருமண வாழ்க்கையின் மிகவும் வேதனையான காலங்களை நினைவுக்கு கொண்டு வந்தது. தனிப்பட்ட முறையில் எனக்கு கடினமாக இருக்கிறது. அதிலுள்ள கேள்விகளுக்கு என் முன்னாள் கணவர்தான் பதிலளிக்க வேண்டும், நான் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
பில்கேட்ஸ் - மெலிண்டா தம்பதி 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.