வங்கதேசத்தில் பொதுத்தேர்தலுக்கு முன் மேலுமொரு ஹிந்து நபர் படுகொலை!
வங்கதேசத்தில் ஹிந்து வணிகரின் கடைக்குள் நுழைந்து கொலைவெறி தாக்குதல்...
வங்கதேசத்தில் தேர்தலுக்கு மூன்று நாள்களே உள்ள நிலையில், ஹிந்து வணிகர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. அங்கு கடை நடத்தி பிழைத்து வந்த சூசன் சந்திர சர்கார் என்பவர் திங்கள்கிழமை(பிப். 9) இரவில் கொல்லப்பட்ட சம்பவம், அண்மைக்காலமாக வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக, அதிலும் குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதற்கான மேலுமொரு சான்றாக அமைந்துவிட்டது.
சௌத்கந்தா கிராமப் பகுதியைச் சேர்ந்த சூசென் சந்திர சர்கார் ‘பாய் பாய் எண்டெர்பிரைஸ்’ என்ற பெயரில் தாக்கா அருகே கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை இரவில் அவரது கடைக்குள் சென்ற மர்ம நபர்கள் சிலர், ஆயுதங்களைக் காட்டி மிரட்டியதுடன் கடையின் கதவுகளை மூடிவிட்டு அவர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். அதன்பின், அவரைக் கடைக்குள் அடைத்துவிட்டு, கடையிலிருந்த பணத்தை திருடிக்கொண்டு கடையின் கதவுகளை மூடிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர்.
இதனிடையே, நெடுநேரமாகியும் வீட்டுக்குத் திரும்பாத சர்காரைத் தேடி அங்கு சென்ற அவரது குடும்பத்தினர், கடையின் கதவுகளைத் திறந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் சர்கார் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
வங்கதேசத்தில் பிப். 12 தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நெருங்க நெருங்க, வகுப்புவாத வன்முறை அபாயகர அளவுக்கு அதிகரித்திருப்பதாக ‘வங்கதேச ஹிந்து புத்த கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில்’ குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது. இந்த கூற்றுக்குச் சன்றாக, கடந்த டிசம்பரில் மட்டும் பதிவான வகுப்புவாத கலவரங்களின் எண்ணிக்கை 51 ஆகும் என்பதை அவர்கள் கவலையுடன் குறிப்பிடுகின்றனர்.