FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத்தீ

தென்மேற்கு பிரான்ஸில் காட்டுத்தீ அதிவேகமாக பரவிவரும் நிலையில், அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டியுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து சுமாா் 20,000 போ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.

Updated On : 24 ஜூலை 2026, 3:24 am IST
கோப்புப் படம்
பகிர்:

தென்மேற்கு பிரான்ஸில் காட்டுத்தீ அதிவேகமாக பரவிவரும் நிலையில், அட்லாண்டிக் கடற்கரையை ஒட்டியுள்ள சுற்றுலாத் தலங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து சுமாா் 20,000 போ் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனா்.

போா்டியக்ஸ் நகருக்கு தென்மேற்கே லேஜ் கேப்-ஃபெரெட்டைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் பரவி வரும் இந்தத் தீயால், இதுவரை 2,400 ஹெக்டோ் (5,900 ஏக்கா்) நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. அதிருஷ்டவசமாக, இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தலைநகா் பாரீஸ் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமாா் 700 வீரா்கள் தீயணைப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை காரணமாகத் தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் நிலவுகின்றன.

Advertisement

Advertisement

லேஜ் நகரிலுள்ள குடியிருப்புகளுக்கு மிக அருகில் (சுமாா் 300 மீட்டா் தொலைவில்) தீ நெருங்கியுள்ளதால், குடியிருப்புகள் மற்றும் சுற்றுலா முகாம்களில் தங்கியிருந்த 10,000-க்கும் மேற்பட்டோா் இரவோடு இரவாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அண்டை கிராமத்தைச் சோ்ந்த 8,800 போ் வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்ஜனா்.

நடப்பு ஆண்டில் மட்டும் பிரான்ஸில் 12,500-க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகி, சுமாா் 44,000 ஹெக்டோ் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தெற்கு ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் சிசிலி தீவில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில், கல்டானிசெட்டா பகுதியில் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரா் அலசாண்ட்ரோ மாா்க்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments