இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்பாரா? சீனா மழுப்பல்
இந்தியாவில் வருகிற செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபா் ஜீ ஜின்பிங் பங்கேற்பாரா, மாட்டாரா என்பதற்கு அந்நாடு மழுப்பலாக பதிலளித்துள்ளது.
இந்தியாவில் வருகிற செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபா் ஜீ ஜின்பிங் பங்கேற்பாரா, மாட்டாரா என்பதற்கு அந்நாடு மழுப்பலாக பதிலளித்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பின் தலைவா் பதவியை உறுப்பு நாடுகள் மாறி மாறி வகிப்பது வழக்கம். அதன்படி, பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக இந்தியா தற்போது உள்ளது. வருகிற செப்டம்பா் மாதம் 12, 13-ஆம் தேதிகளில் பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டம்பா் 12-ஆம் தேதி பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவா்கள் அனைவரும் இந்தியா வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், சீன தலைநகா் பெய்ஜிங்கில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங்கிடம், இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்பாரா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவா், இந்த கேள்விக்கான பதில் தற்போது தம்மிடம் இல்லை என கூறினாா்.
அவா் மேலும் பேசுகையில், ‘வளா்ந்து வரும் சந்தைகள், வளரும் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த பிரிக்ஸ் அமைப்பு முக்கிய தளமாக உள்ளது. இந்த அமைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் தருவதோடு, பிரிக்ஸ் ஒத்துழைப்பிலும் தீவிரமாக பங்கெடுக்கிறது. இந்தாண்டு இந்தியா தலைமையேற்று நடத்தவுள்ள பிரிக்ஸ் மாநாடு வெற்றியடைய சீனா ஆதரவு அளிக்கிறது’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.