முகப்பு
உலகம்

இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்: அமெரிக்கா அறிக்கை!

’பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள்’ என்ற பெயரில் அமெரிக்க காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி...

Updated On : 29 மார்ச், 2026 at 5:00 PM
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் - PTI
பகிர்:

இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவை குறிப்பாக ஜம்மு-காஷ்மீரைக் குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருவதாக ’பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள்’ என்ற பெயரில் அமெரிக்க காங்கிரஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், அமெரிக்க சட்டத்தின்படி வகைப்படுத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்களில் 12 குழுக்கள் இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தத்தின் கீழ் இயங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத அமைப்புகள் இந்தியா - காஷ்மீரைச் சார்ந்தவை, ஆப்கனைச் சார்ந்தவை, உள்நாட்டு அமைப்புகள், உலகளாவிய அமைப்புகள், பிரிவினைவாத ஷியா எதிர்ப்பு என 5 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மேலும், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹரகத்-உல்-ஜிஹாத் அல்-இஸ்லாமி, ஹரகத்-உல்-முஜாஹிதீன் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தான் எல்லையில் இருந்து செயல்படுவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

ஹிஸ்புல் முஜாஹிதீன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு 1989-ல் உருவாக்கப்பட்டது. இது பாகிஸ்தானின் மிகப்பெரிய இஸ்லாமிய அரசியல் கட்சியின் பயங்கரவாதப் பிரிவாகுன். இது 2017-ல் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. இந்திய அரசின் கீழுள்ள காஷ்மீரில் செயல்படும் மிகப்பெரிய மற்றும் பழமையான பயங்கரவாதக் குழுக்களில் இதுவும் ஒன்று

காஷ்மீருக்கான சுதந்திரம் அல்லது காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கத்துடன் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

ஹரக்கத் உல்-முஜாஹிதீன்

ஹரக்கத் உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பு 1997-ல் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. இது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சில பாகிஸ்தான் நகரங்களில் இருந்து செயல்படுகிறது. கடந்த1999-ல் நடந்த காந்தகர் விமானக் கடத்தலுக்கு இந்த பயங்கரவாத அமைப்பே பொறுப்பு.

தற்போது சிறையில் இருக்கும் பயங்கரவாதியான ஹபீஸ் சயீத் தலைமையில் செயல்படும் இந்த அமைப்பு அதன் மீதான தடைகளைத் தவிர்க்க தனது பெயரை ஜமாத்-உத்-தாவா என மாற்றிக்கொண்டது. ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளைக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, 2008-ல் இந்தியாவின் மும்பையில் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கும், மேலும் பல தாக்குதல்களுக்கும் இந்த அமைப்புப் பொறுப்பாக இருந்தது.

ஜெய்ஷ்-இ-முகமது

காஷ்மீரைச் சேர்ந்த பயங்கரவாதி மசூத் அசாரால் கடந்த 2000-ஆம் ஆண்டில் ஜெய்ஷ்-இ-முகமது நிறுவப்பட்டது. 2001-ஆம் ஆண்டில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

லஷ்கர்-இ-தொய்பாவுடன் இணைந்து, 2001-ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் உள்பட பல தாக்குதல்களை இந்த அமைப்பு நடத்தியுள்ளது. பஞ்சாப் மற்றும் ஆசாத் காஷ்மீர் ஆகிய பகுதிகளைத் தளமாகக் கொண்ட இந்த அமைப்பு, இந்தியாவிலுள்ள காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க முற்படுகின்றனர். இவர்கள் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வருகின்றனர்.

1980 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பல தீவிரவாதக் குழுக்களின் செயல்பாட்டுத் தளமாக இருக்கிறது என இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. ஆயுதமேந்திய பயங்கரவாத அமைப்புகளைத் தடுக்கும் 2014-ஆம் ஆண்டு தேசிய செயல் திட்டம் அங்கு அமலில் இருந்தாலும் அவர்களைத் தடுப்பதில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது.

சமீப ஆண்டுகளில் பாகிஸ்தானில் பயங்கரவாதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பயங்கரவாதத்தின் காரணமாக கொல்லப்படுபவர்கள் எண்ணிக்கை 2019-ல் 365 ஆக இருந்த நிலையில், 2025-ல் அவை 4001 ஆக உயர்ந்துள்ளது.

இது கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Pakistan shelters terror groups targeting India, says US report

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.