நேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசு
கோஷி ஆற்றில் வரும் மீன்களைப் பிடித்து சமைத்து உண்ண வேண்டாம் என பிகார் அரசு அறிவுறுத்தியுள்ளது குறித்து...
கோஷி ஆற்றில் வரும் மீன்களைப் பிடித்து சமைத்து உண்ண வேண்டாம் என பிகார் அரசு செவ்வாய்க்கிழமை (செப். 1) அறிவுறுத்தியுள்ளது.
திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.
சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
Advertisement
Advertisement
இந்தப் இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், காணாமல் போன 4000-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.
கோஷி ஆறானது நேபாளத்திலிருந்து பிகார் மாநிலத்தின் பீம்நகர் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஆற்றில் வரும் மீன்களை பிகார் மக்கள் பலர் பிடித்து சாப்பிடுகின்றனர்.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக அங்குள்ள தொழிற்சாலைக் கழிவுகள், ரசாயனங்கள் மற்றும் அசுத்தமான நீர் ஆற்று நீரில் கலந்துள்ளன. அந்த நீரில் உள்ள மீன்களைப் பிடித்து சமைத்து சாப்பிடுவதால் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் தொற்றுநோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகையால், நிலைமை சீராகும் வரை, பிகார் மக்கள் கோஷி ஆற்றில் உள்ள மீன்களை பிடித்து சாப்பிடவோ, அதை விற்கவோ வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், இதுகுறித்த தவறான தகவல்களை அல்லது வதந்திகளை நம்பவோ பரப்பவோ வேண்டாம் என்றும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
The Bihar government advised on Tuesday (Sept. 1) against catching and consuming fish from the Kosi River.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.