யேமனில் முக்கிய துறைமுகத்தை கைப்பற்றிய ஹௌதிகள்! வெளியேறும் அரசுப் படைகள்!
யேமனில் முக்கிய துறைமுகத்தை ஹௌதிகள் கைப்பற்றியது குறித்து...
யேமனின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மோக்கா துறைமுகத்தை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யேமனில் உள்ள ஒரு சிறைச்சாலையின் மீது சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதனால், அரசுப் படைகளுக்கு எதிராக ஈரானின் ஆதரவு பெற்ற ஹௌதி கிளர்ச்சிப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாள்களாக இருதரப்புக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல்களைத் தொடர்ந்து செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மோக்கா துறைமுகத்தை ஹௌதிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதன்மூலம், 12 சதவிகித உலகளாவிய வர்த்தகம் நடைபெறும் செங்கடல் பகுதியின் நுழைவு வாயிலான பாப் அல்-மண்டாப் நீரிணை முழுவதுமாக ஹௌதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஹொடைடா துறைமுகத்துக்கு வரும் சௌதியின் ராணுவத் தளவாடங்களை ஹௌதி படைகள் முடக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இத்துடன், யேமன் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மேலும் சில முக்கிய நகரங்கள் மற்றும் பகுதிகளை ஹௌதிகள் கைப்பற்றும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
யேமனில் ஹௌதிகள் தொடர்ந்து முன்னேறி வருவதால், தயீஸ் மற்றும் மோக்கா நகரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அரசுப்படைகள் அங்குள்ள ராணுவத் தளங்களில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆயுதங்களைத் தவிர்த்து விட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வரும் படைகளிடம் பேசத் தயார் என ஹௌதிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில், அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்து வரும் சௌதி அரேபியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஹௌதிகள் மேற்கொண்டு வருகின்றன.
செங்கடல் பகுதியில் சௌதி கப்பல்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டதால், ஹௌதிகளுக்கு எதிராக சௌதி படைகள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Houthi rebels have captured the port of Mocha, located in the Red Sea region of Yemen.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.