FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு முக்கியமான எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூடியது சவூதி அரேபியா!

ஈராக்கின் ட்ரோன் தாக்குதலுக்குள்ளான ஒரு நாளுக்குப் பிறகு, நாடு முழுவதும் செல்லும் தனது முக்கிய எண்ணெய் குழாய் வழித்தடத்தை சவூதி அரேபியா மூடியுள்ளது தொடர்பாக...

12 செப்டம்பர் 2026, 12:08 pm IST
ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு முக்கியமான எண்ணெய் குழாய் வழித்தடத்தை மூடியது சவூதி - எக்ஸ்
பகிர்:

மத்திய கிழக்கில் போர் பரவிவருவதை உறுதிப்படுத்தும் விதமாக, ஈராக்கின் ட்ரோன் தாக்குதலுக்குள்ளான ஒரு நாளுக்குப் பிறகு, நாடு முழுவதும் செல்லும் தனது முக்கிய எண்ணெய் குழாய் வழித்தடத்தை தற்காலிகமாக மூடியுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் தொடரும் நிலையில், யேமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற கிளா்ச்சி அமைப்பான ஹூதி, சவூதி அரேபியாவின் 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் மீதான ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து இந்த தற்காலிகமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலின் போது ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், சவூதி அரேபியா தொடர்ந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் இந்தக் 1,200 கிலோமீட்டர் தூரம் கொண்ட 'கிழக்கு-மேற்கு' குழாய் வழித்தடம் முக்கிய பங்காற்றியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை(செப்.10) ஈராக்கிலிருந்து வந்த பல ட்ரோன்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சவூதி வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியது. இந்தத் தாக்குதலைக் கண்டித்த ஈராக் அரசு, இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. மேலும் ஈரான் எல்லைப் பகுதி மைசான் மாகாண ராணுவத் தளபதியை பணியில் இருந்து நீக்கியது.

யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடலின் தெற்கு நுழைவாயிலில் உள்ள பாப்-எல்-மண்டேப் நீரிணையில் அமைந்துள்ள மோகா துறைமுகம் மற்றும் பெரிம் தீவு ஆகியவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி இந்த மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரும் தொழில்நுட்பக் குழுவினரும் சேதங்கள் குறித்த விவரங்களை மதிப்பீடு செய்து வருவதோடு, எண்ணெய் குழாய் வழித்தடத்தை மீண்டும் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிக்கப்படவில்லை.

பாப்-எல்-மண்டேப் நீரிணை உலகின் மிக முக்கியமான கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகும். ஹூதிகளின் இந்த முன்னேற்றம், அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலையை உயர்த்தும் ஈரானின் உத்திக்கு வலுசேர்க்கக்கூடும்.

சவூதி ஆதரவு பெற்ற மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்தைச் சேர்ந்த இரண்டு குழுக்கள், தங்கள் படைகள் பெரிம் தீவிலிருந்து வெளியேறியதாகவும், அந்த தீவுக்கு எதிரே செங்கடல் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள துபை நகரத்தையும் ஹூதிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தன.

ஹோர்முஸ் நீரிணைக்கு அரேபிய தீபகற்பத்தின் மறுபுறம் அமைந்துள்ள பாப்-எல்-மண்டேப் நீரிணையை ஹூதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், அவர்களுக்கு ஆதரவளிக்கும் ஈரான் அமெரிக்காவுடனான போரில் ஒரு முக்கிய சாதகமான நிலையை அடையக்கூடும்; இது இரண்டாவது முக்கிய வழித்தடம் வழியாக நடைபெறும் விநியோகத்தைக் குறைத்து, எண்ணெய் விலையை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.

மறுபுறம், சவூதி அரேபியாவால் மூடப்பட்ட 1,200 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தக் குழாய் வழித்தடமானது, ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தாமல் அந்நாட்டின் எண்ணெயை உலக சந்தைகளுக்குக் கொண்டு செல்வதற்கான முக்கிய மாற்று வழியாகும். கடந்த சில மாதங்களாக இதன் மூலம் நாளொன்றுக்கு 4 முதல் 5 மில்லியன் பீப்பாய் எண்ணெய் கொண்டு செல்லப்பட்டு வந்தது; இது உலகளாவிய விநியோகத்தில் 4 முதல் 5 சதவீதத்திற்குச் சமமாகும். இந்த முடக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது.

Saudi Arabia said that it has shut down a major cross-country oil pipeline a day after it was attacked by drones.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments