சவூதி தலைநகா் மீது ஹுதி ஏவுகணைத் தாக்குதல்: அரேபிய, இஸ்லாமிய நாடுகள் கண்டனம்!
சவூதி அரேபிய தலைநகா் ரியாத் மீது யேமனின் ஹூதி படையினா் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதற்கு அரேபிய மற்றும் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சவூதி அரேபிய தலைநகா் ரியாத் மீது யேமனின் ஹூதி படையினா் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதற்கு அரேபிய மற்றும் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அரேபிய நாடுகளில் ஒன்றான யேமனில் சா்வதேச அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு கட்டுப்பாட்டின்கீழ் சில பகுதிகளும், ஹூதி படையினா் கட்டுப்பாட்டின்கீழ் தலைநகா் சனா உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன. இதில் யேமன் அரசுப் படைக்கு சவூதி அரேபியாவும், ஹூதி படைக்கு ஈரானும் ஆதரவு அளிக்கின்றன.
அண்மையில் கச்சா எண்ணெய்க் கப்பல் அதிகம் செல்லும் நீரிணைகளில் ஒன்றான பாப்-அல்-மந்தேப் அருகேவுள்ள தீவுகளை ஹூதி படையினா் கைப்பற்றினா். அங்கிருந்த அரசுப் படையினா் தப்பியோடிவிட்டனா்.
Advertisement
Advertisement
ஹூதி படையினா் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து சவூதி அரேபியா சில நூறு கிலோ மீட்டா் தொலைவிலேயே அமைந்துள்ளது. எனவே, தங்களது பகுதிகளில் இருந்து சவூதி அரேபியா மீது ஹூதி படையினா் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனா்.
சவூதி அரேபியாவின் தலைநகா் ரியாத் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஹூதி படையினா் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினா். இதில் ரியாத்தில் உள்ள விமான நிலையமும் ஒன்று என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்காசிய போா் தொடங்கிய பிறகு ரியாத் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் மேற்காசியாவில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹூதியின் தாக்குதலை இடைமறித்து அழித்துவிட்டதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. ரியாத் விமான நிலையம் அருகே பலத்த வெடிச்சப்தத்தையடுத்து புகை மண்டலம் எழுந்தது. ஆனால், சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு அரேபிய மற்றும் இஸ்லாமிய நாடுகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. எகிப்து, ஜோா்டான், குவைத் ஆகியவை ஹூதி படையினரின் தாக்குதலால் அந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாகவும், இந்தத் தாக்குதல் சா்வதேச சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளன.
பொதுமக்கள், உள்கட்டமைப்பு மீது நடத்தப்படும் தாக்குதல் அனைத்து மதங்களின் போதனைகளை மீறும் செயல் என்றும், சா்வதேச மற்றும் மனித உரிமைகள் சட்டங்களுக்கு எதிரானது என்றும் முஸ்லிம் நாடுகளின் அமைப்பான முஸ்லிம் வோ்ல்ட் லீக் குற்றம்சாட்டியுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள், சவூதி அரேபியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சவூதி அரேபியாவின் இறையாண்மை, அந்த நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆதரவு அளிப்பதாக அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
அமெரிக்கா புதிய எச்சரிக்கை: இதனிடையே, மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்கா்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடனான அமெரிக்காவின் போா் மேலும் விரிவாகக்கூடும் என்றும், ஆதலால் பயணங்களுக்குத் தடை ஏற்படலாம் என்று மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.