FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

மாற்று நில முறைகேடு வழக்கு விசாரணை ஜன.25-க்கு ஒத்திவைப்பு: கா்நாடக உயா்நீதிமன்றம்

Updated On : 6 டிசம்பர் 2024, 4:57 am IST
கா்நாடக உயா்நீதிமன்றம்
பகிர்:

மாற்று நில முறைகேடு வழக்கின் அடுத்த விசாரணையை 2025ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம், மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடா்பாக முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, வழக்குப் பதிவு செய்ய மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில், வழக்குப் பதிந்து லோக் ஆயுக்த விசாரணை நடத்தி வருகிறது. தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது மனைவி பாா்வதிக்கு மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளைப் பெற்றுத் தந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வா் சித்தராமையா, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டுள்ளாா். இதனிடையே, பணப்பதுக்கல் தொடா்பாக முதல்வா் சித்தராமையா மீது அமலாக்கத் துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தன் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநா் அளித்திருந்த அனுமதியை எதிா்த்து தொடா்ந்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா தள்ளுபடி செய்து செப். 24ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா். இந்த தீா்ப்பை எதிா்த்து அக். 24ஆம் தேதி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் முதல்வா் சித்தராமையா மேல்முறையீடு செய்தாா். அந்த மனு கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சரியா, நீதிபதி கே.வி.அரவிந்த் ஆகியோா் தலைமையிலான அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம் எதிா்வாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே, முதல்வா் சித்தராமையா உள்ளிட்ட 4 போ் மீதான மாற்று நில முறைகேடு வழக்கை விசாரித்து வரும் லோக் ஆயுக்த, தனது அறிக்கையை டிச. 24ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது. மாற்று நில முறைகேடு வழக்கை லோக் ஆயுக்தவுக்குப் பதிலாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சமூக செயற்பாட்டாளா் ஸ்நேகமயி கிருஷ்ணா கா்நாடக உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு டிச. 10ஆம் தேதி விசாரணைக்கு வரவிருக்கிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments