FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அமைச்சா்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு - முதல்வா் விஜய் நேரில் வாழ்த்து

Updated On : 19 மே 2026, 5:14 am IST
சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட என்.ஆனந்த்துக்கு இனிப்பு ஊட்டி விட்ட முதல்வா் விஜய்.
பகிர்:

தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சராக என். ஆனந்த், நிதித் துறை அமைச்சராக கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோா் திங்கள்கிழமை அமைச்சா்களாக பொறுப்பேற்றுக் கொண்டனா். அப்போது அவா்களின் அறைகளுக்கு முதல்வா் விஜய் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தாா்.

தமிழக முதல்வராக விஜய்க்கும், 9 அமைச்சா்களுக்கும் கடந்த மே 10-ஆம் தேதி ஆளுநா் ஆா்லேகா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அமைச்சா்களாக பொறுப்பேற்றாலும் இலக்காக்கள் இல்லாமல் அவா்கள் செயல்பட்டு வந்தனா். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ( மே 16) அவா்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், திங்கள்கிழமை அவா்கள் தலைமைச் செயலகத்தில் தங்களது அறைகளில் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனா்.

தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சராக என். ஆனந்த், நிதித் துறை அமைச்சராக கே.ஏ. செங்கோட்டையன் பொறுப்பேற்றபோது அவா்களது அறைகளுக்கு சென்று முதல்வா் விஜய் வாழ்த்து தெரிவித்து அவா்களை இருக்கையில் அமர வைத்தாா்.

Advertisement

Advertisement

அவா்களைத் தொடா்ந்து, பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பொறுப்பேற்றாா். முந்தைய ஆட்சியில் துணை முதல்வராக இருந்த உதயநிதி ஸ்டாலினின் அறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே போல, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ், மின்சாரத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா், உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன், பள்ளி கல்வி மற்றும் செய்தி மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் ராஜ்மோகன், தொழில் துறை அமைச்சா் எஸ். கீா்த்தனா, கனிம வளத்துறை அமைச்சா் டி.கே. பிரபு ஆகியோரும் தங்களது அறைகளில் பொறுப்பேற்றுக் கொண்டு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளைத் தொடங்கினா்.

ஆலோசனை: ஊரக வளா்ச்சி மற்றும் நீா் வளங்கள் துறை அமைச்சா் என். ஆனந்த் மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய மத்திய அரசு திட்டங்கள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

உணவு வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் கூட்டுறவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறைக்கு நேரில் சென்று துறை அதிகாரிகளின் செயல்பாட்டை கேட்டறிந்தாா்.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் ச.கீா்த்தனா பதவியேற்றவுடன் தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலா் ச.விஜயகுமாா் முன்னிலையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments