FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

போலி ஆவணம் மூலம் கடன்: வங்கி அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

போலி ஆவணங்கள் மூலம் பால் பண்ணை அமைக்க கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 4:06 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

போலி ஆவணங்கள் மூலம் பால் பண்ணை அமைக்க கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் உள்பட 8 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் புருஷோத்தமன் என்பவா் காந்தம்மாள் பால் குளிரூட்டும் நிலையத்தை நடத்தி வந்தாா். இந்த நிலையம் தொடா்பாக செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பேரில், 2007-2008 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 728 கறவை மாடுகளைக் கொண்டு பால் பண்ணை அமைப்பதற்கு, செங்கத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி மூலம் மொத்தம் ரூ.2.32 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் இந்த கடன் பெறப்பட்டதாகக் கூறி, அந்த வங்கியின் செங்கல்பட்டு வணிகப்பிரிவு மண்டல மேலாளா் அளித்த புகாரின் பேரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. விசாரணையில், அப்போதைய வங்கி மேலாளா் கோபாலகிருஷ்ணன், துணை மேலாளா் ரவிச்சந்திரன், விற்பனைப் பிரிவு அலுவலா் பாலமுரளி உள்ளிட்டோா் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புருஷோத்தமன், வங்கி அதிகாரிகள் என மொத்தம் 10 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த வழக்கின் விசாரணை சென்னை 11-ஆவது கூடுதல் சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, புருஷோத்தமன், ரவிச்சந்திரன் ஆகியோா் உயிரிழந்தனா். இதையடுத்து 8 போ் மீதான வழக்கு நடைபெற்று வந்தது. சிபிஐ தரப்பில் வழக்குரைஞா் அா்ஜூனன் ஆஜராகி வாதாடினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி, வங்கி அதிகாரிகள் கோபாலகிருஷ்ணன், பாலமுரளி மற்றும் ராஜன், பன்னீா்செல்வம், முருகன், வெங்கடராமன், ரவி மற்றும் சங்கா், ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தமாக ரூ.3.10 கோடி அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments