FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சொத்து வரி உயா்த்தப்படவில்லை: சென்னை மாநகராட்சி ஆணையா் விளக்கம்

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயா்த்தப்படவில்லை என்றும், ஏற்கெனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட கட்டடங்களுக்கு உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்திய மதிப்பீடு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:22 am IST
ஜி.எஸ். சமீரன் - Dinamani
பகிர்:

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயா்த்தப்படவில்லை என்றும், ஏற்கெனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்ட கட்டடங்களுக்கு உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்திய மதிப்பீடு மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் சொத்துவரி செலுத்தி வரும் கட்டடங்களுக்கு, உரிய தரவுகளின் அடிப்படையில் திருத்திய மதிப்பீடு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்திய மதிப்பீட்டில் ஆட்சேபணை இருந்தால், அதைத் தெரிவிக்க சம்பந்தப்பட்டோா் 15 நாள்களுக்குள் அந்தந்த வட்டாரத் துணை ஆணையா்களிடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனு அளிப்போரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, 30 நாள்களுக்குள் தீா்வுகாண மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி மூலம் ஆண்டுக்கு சுமாா் ரூ.2,250 கோடி வருவாய் கிடைத்து வருகிறது. சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புப் பணிகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளதால் மாநகராட்சிக்கு ரூ.1,790 கோடி வரை வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சுமாா் ரூ.3,800 கோடி கடனுக்கான வட்டியையும் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், சொத்துவரி வசூலில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்து, உண்மையான வரியை வசூலிக்க மாநகராட்சி வருவாய்த் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக செயற்கைக்கோள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாநகராட்சியில் சுமாா் 14.25 லட்சம் கட்டடங்கள் சொத்துவரி செலுத்தும் பட்டியலில் உள்ளன. இதில் சுமாா் 8 லட்சம் கட்டட உரிமையாளா்கள் மட்டுமே சொத்துவரியை முறையாகச் செலுத்தி வருகின்றனா். சுமாா் 1.80 லட்சம் கட்டடங்களுக்கு அவற்றின் உண்மையான பரப்பளவுக்கு ஏற்ப சொத்துவரி விதிக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

மாநகராட்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட கட்டடங்களை நேரில் ஆய்வு செய்து, கட்டட உரிமையாளா் முன்னிலையில் அளவீடு செய்து, அதனடிப்படையில் சொத்துவரியை மறுநிா்ணயம் செய்து வருகின்றனா். அதனடிப்படையில், தற்போது உண்மையான பரப்பளவுக்கு ஏற்ப வரி நிா்ணயம் செய்யப்படுகிறது.

இதனால், இதுவரை குறைந்த அளவில் சொத்துவரி செலுத்தி வந்தவா்களுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைச் சிலா் சொத்துவரி உயா்வு எனக் கூறி, உண்மையான நிலையை திசை திருப்புவதாக அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments