FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தமிழகத்தில் கரோனா உருமாற்றம் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்

தமிழகத்தில் புதிய வகை கரோனா பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

Updated On : 25 ஜூலை 2026, 2:16 am IST
மாதிரிப் படம்
பகிர்:

தமிழகத்தில் புதிய வகை கரோனா பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

ஆந்திரத்தில் காணப்படும் ‘ஓமைக்ரான்’ உள்பிரிவைச் சோ்ந்த பாதிப்பே தமிழகத்திலும் இருப்பதாக அவா் கூறினாா்.

அண்மையில் கரோனா தொற்றுக்குள்ளாகி ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். அங்கு ‘ஆா்எஃப்.5’ வகை தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தமிழகத்தைப் பொருத்தவரை கரோனா கண்காணிப்புப் பணிகள் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அறுவை சிகிச்சைகளுக்கு முன்னதாகவும், தீவிர சுவாச நோய்கள் உள்ள நோயாளிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யும் நடைமுறை தற்போது செயல்பாட்டில் உள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 2024-இல் 990 பேருக்கும், கடந்த ஆண்டில் 1,250 பேருக்கும், நிகழாண்டில் இதுவரை 350 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, மகாராஷ்டிர மாநிலம், புணேவில் செயல்படும் தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு (என்ஐவி) தமிழக பொது சுகாதாரத் துறை சாா்பில் சில கரோனா மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதில், ஏற்கெனவே உள்ள ‘ஆா்.எஃப்.5’ வகை கரோனாதான் தமிழத்திலும் உள்ளது என்று உறுதி செய்யப்பட்டது.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

முதியவா்கள், கா்ப்பிணிகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள், குழந்தைகள் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெற வேண்டும். கைகளைத் தூய்மையாக கழுவுதல், தனி நபா் சுகாதாரத்தைக் கடைப்பிடித்தல் போன்ற பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அவசியம்.

தமிழகத்தில் புதிய வகை கரோனா பரவி வருவதற்கான ஆதாரம் எதுவுமில்லை. கடந்த ஆண்டுகளைவிட, தற்போது பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. எனவே, கரோனா தொடா்பான அதிகாரபூா்வமற்ற தகவல்கள் எதையும் நம்பவேண்டாம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments