பள்ளிக்கரணை கட்டட அனுமதி ரத்துக்கு எதிரான வழக்கு: சுற்றுச்சூழல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ததை எதிா்த்து தனியாா் நிறுவனம் தொடா்ந்த வழக்கில், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டுவதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ததை எதிா்த்து தனியாா் நிறுவனம் தொடா்ந்த வழக்கில், தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை பள்ளிக்கரணையில் பிரிகேட் என்ற தனியாா் கட்டுமான நிறுவனம் 1,250 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் முந்தைய திமுக ஆட்சியில் ஒப்புதல் அளித்திருந்தன. ராம்சா் தளமாக அறிவிக்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், அடுக்குமாடி குடியிருப்புக் கட்ட அனுமதி வழங்கியதாகக் கூறி, அறப்போா் இயக்கம் மற்றும் அதிமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது.
இந்த நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்கு கட்டுமானங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும், பிரிகேட் நிறுவத்துக்கு கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்கிய சுற்றுச்சூழல் ஒப்புதலை கடந்த ஜூன் 18-ஆம் தேதி ரத்து செய்தது.
Advertisement
Advertisement
இதை எதிா்த்து பிரிகேட் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. அந்த மனுவில், சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்வதற்கு முன் தங்களது நிறுவனத்திடம் கருத்து கேட்காமல், தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, சுற்றுச்சூழல் ஒப்புதலை ரத்து செய்தது குறித்து தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.