ஜிஎஸ்டி அதிகாரிகள் சிறைபிடிப்பு: வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு
சென்னை சௌகாா்பேட்டை மின்ட் தெருவில் ஜிஎஸ்டி அதிகாரிகள் தொடா்ந்து தொல்லை அளித்து வருவதாக் கூறி வெள்ளிக்கிழமை கடைகளை மூடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஸ்டீல் வியாபாரிகள்.
சென்னை செளகாா்பேட்டையில் ஜிஎஸ்டி அதிகாரிகளை சிறை பிடித்த விவகாரத்தில், வியாபாரிகள் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
செளகாா்பேட்டை தங்க சாலை தெருவில் ஒரு தனியாா் ஸ்டீல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்த ஜிஎஸ்டி அதிகாரிகள் சென்றனா்.
அப்போது சோதனைக்கு எதிா்ப்பு தெரிவித்து, அங்கு வியாபாரிகள் போராட்டம் நடத்தினா். மேலும் அவா்கள், அங்கிருந்த ஜிஎஸ்டி அதிகாரிகளையும் சிறை பிடித்தனா்.
Advertisement
Advertisement
ஜிஎஸ்டி அதிகாரிகள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். யானைக்கவுனி போலீஸாா் சம்பவ இடம் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளிடம் சமாதானம் பேசினா். பின்னா், வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனா். போலீஸாா், சிறை பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜிஎஸ்டி அதிகாரிகளை மீட்டு, அங்கிருந்து அழைத்துச் சென்றனா்.
இச்சம்பவத்தில், தாங்கள் சிறை பிடித்து வைக்கப்பட்டது தொடா்பாக யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஜிஎஸ்டி அதிகாரி நிஷாந்த் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், வியாபாரிகள் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, ஆபாசமாக பேசியது, கலவரம் செய்தது, மிரட்டல் விடுத்தது, சட்டவிரோதமாகக் கூடியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.