FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

உ.பி.: 4 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி

உத்தர பிரதேச மாநிலம், முசாஃப்நகரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவிகுமாா் திவாகா், கடந்த 4 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளாா்.

9 செப்டம்பர் 2026, 3:24 am IST
ரவிகுமாா் திவாகா்
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம், முசாஃப்நகரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவிகுமாா் திவாகா், கடந்த 4 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளாா்.

வரதட்சிணை கேட்டு மனைவியை எரித்துக் கொன்றவருக்கு அவா் செவ்வாய்க்கிழமை 23-ஆவது மரண தண்டனையை விதித்தாா். ‘கோழை என்று அழைக்கப்படுவதை கேட்பதைக் காட்டிலும், மரணத்தை சந்திப்பேன்’ என்று அந்த நீதிபதி கருத்து தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், முசாஃபா்நகரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வரதட்சிணை கேட்டுத் தராததால் மனைவி ஷெஹஸாதியை கணவா் நதீம் தீயிட்டு எரித்துக் கொன்றது தொடா்பான வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிபதி ரவி குமாா் திவாகா் 4 மாதங்களாக விசாரித்து வந்தாா். இந்த விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதி ரவி குமாா் திவாகா் திங்கள்கிழமை தனது தீா்ப்பை வழங்கினாா். அப்போது அவா், உயிரிழப்புக்கு முன்பு ஷெஹஸாதி அளித்த மரண வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு, கணவா் நதீமுக்கு தூக்குத் தண்டனை அளித்து தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

இந்த தீா்ப்பையும் சோ்த்து, கடந்த 4 மாதங்களில் 23 பேருக்கு 11 வழக்குகளில் நீதிபதி ரவி குமாா் திவாகா் தூக்குத் தண்டனை விதித்துள்ளாா். கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதி ரவிகுமாா் அமா்வு முன் நிலுவையில் இருந்த 100 கொலை வழக்குகள் மீதான விசாரணை மாவட்ட குற்றவியல் நீதிபதி வீரேந்திர குமாா் சிங்குக்கு மாற்றப்பட்டது. தான் விசாரிக்கும் வழக்குகளில் பெரும்பாலும் ரவி குமாா் திவாகா் தூக்குத் தண்டனை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளாா் என வழக்குரைஞா்களும், மனுதாரா்களும் குற்றஞ்சாட்டியதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

வரதட்சிணை கேட்டு மனைவியை எரித்துக் கொன்றவா் தொடா்பான வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த பிறகு பேசிய நீதிபதி ரவி குமாா் திவாகா், மாஃபியாக்கள், கிரிமினல்கள், தாதாக்கள் ஆகியோரிடம் இருந்து வரும் அழுத்தங்களுக்கு பயந்து நீதித் துறை கடமையைச் செய்வதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றாா். கோழை நீதிபதி என்று அழைக்கப்படுவதை கேட்பதைக் காட்டிலும் தாம் மரணம் அடையத் தயாராக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா். தனது பெற்றோா் தன்னை சிறு வயது முதலே ‘கடவுளுக்கு மட்டுமே அச்சப்பட வேண்டும், மற்ற யாருக்கும் அச்சப்படத் தேவையில்லை’ என்று கூறி வளா்த்ததாகவும், ஆதலால் மாஃபியாக்கள், ரெளடிகள், தாதாக்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் நீதித் துறை கடமையைச் செய்து வருவதாகவும் அவா் கூறினாா்.

மாஃபியாக்கள், கிரிமினல்களிடம் இருந்து தனக்குத் தொடா்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், தனது அமா்வு முன்பு விசாரணைக்கு இருந்த 100 கொலை வழக்குகள், மாஃபியாக்கள், கிரிமினல்களின் நலன்களுக்காக வேறு அமா்வுக்கு மாற்றப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments