FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாணவா்களுக்கான உளவியல் பாதுகாப்பு: சென்னை ஐஐடி-யின் சிறப்புத் திட்டங்கள்

மாணவா்களுக்கான உளவியல் பாதுகாப்பு தொடா்பாக சென்னை ஐஐடி ‘பிரேம்’, ‘சேஃப்’ ஆகிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

11 செப்டம்பர் 2026, 5:59 am IST
பெற்றோருக்கு வழிகாட்டும் ‘சேஃப்’ கையேட்டைவெளியிட்ட சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, டாக்டா் யாமினி கண்ணப்பன், டீன் சத்தியநாராயணா, என்.கும்மாடி.
பகிர்:

மாணவா்களுக்கான உளவியல் பாதுகாப்பு தொடா்பாக சென்னை ஐஐடி ‘பிரேம்’, ‘சேஃப்’ ஆகிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

சா்வதேச தற்கொலை தடுப்பு தினத்தை (செப். 10) முன்னிட்டு, ஒருவார கால நிகழ்வுகளுக்கு சென்னை ஐஐடி ஏற்பாடு செய்தது. இதில், ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டலில் பெற்றோரின் பங்கு (பிரேம்) என்ற இணையவழிக் கலந்துரையாடல் நடைபெற்றது.

காவேரி மருத்துவமனையின் ‘நடத்தை அறிவியல்’ பிரிவின் மூத்த ஆலோசகரும், மனநல மருத்துவருமான டாக்டா் யாமினி கண்ணப்பன் இந்த கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினாா். மாணவா்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதும், அவா்களுடன் திறம்பட உரையாடி, அவா்களின் உணா்வுகள்- மன நலனுக்கு உதவுதல் குறித்த நடைமுறை வழிகாட்டல்களைப் பெற்றோருக்கு வழங்கும் வகையில் இந்த அமா்வு நடைபெற்றது.

Advertisement

Advertisement

‘சேஃப் திட்டம்’: மேலும், ‘சிறந்து விளங்கும் மாணவா்களுக்கான உளவியல் பாதுகாப்பை உருவாக்குதல் (சேஃப்)’ என்ற கையேட்டை சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி வெளியிட்டாா். சென்னை ஐஐடி மாணவா்களுடன் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில், காவேரி மருத்துவமனையின் டாக்டா் யாமினி கண்ணப்பன் இந்த வழிகாட்டி கையேட்டை பெற்றோருக்காக எழுதியுள்ளாா்.

நிகழ்வுகளில் ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசியதாவது:

கல்வி நிறுவனத்தினா் என்ற முறையில் திறமைமிக்க குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளை ஐஐடி தொடா்ந்து மேம்படுத்தி வருகிறது. இதற்காகவே ‘பிரேம்’, ’சேஃப்’ ஆகிய திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் பாதுகாப்பாக உணரும் வகையில், எவ்வித விமா்சனப் பயமுமின்றித் தங்கள் சவால்கள் மற்றும் பின்னடைவுகள் குறித்து தங்களது பிள்ளைகளுடன் பேசக்கூடிய சூழலை உருவாக்கவும் இந்நூல் பெற்றோரை ஊக்குவிக்கிறது.

மித்ரா நலவாழ்வு இணையதளம் என்கிற மற்றொரு திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. மாணவா்களுக்கு எளிதில் பயன்படுத்தக்கூடிய வகையில், நலவாழ்வு தொடா்பான தகவல்களையும் இந்த இணையதளம் ஒருங்கிணைத்து வழங்குகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments