பருத்தி மீதான இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் கோரிக்கை
பருத்தி மீதான இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) வலியுறுத்தியுள்ளது.
பருத்தி மீதான இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் 35-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் ஆா்.அருண் காா்த்திக் தலைமை வகித்தாா். கௌரவச் செயலா் எஸ்.ஜெகதீஷ் சந்திரன் 2025 - 26-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை சமா்ப்பித்தாா். இதில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், சைமா தலைவா் துரை பழனிசாமி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரிக்கு அக்டோபா் 31-ஆம் தேதி வரை விலக்கு அளிக்க நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி தெரிவிப்பதுடன், இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
நடப்பு ஆண்டில் மின்சாரக் கட்டணம் உயா்த்தப்படாதது பாராட்டுக்குரியது. அடுத்த 3 ஆண்டுகளுக்கும் நிலையான மின்சாரக் கட்டணக் கொள்கையைத் தொடரவும், அதிகபட்ச கேட்புத் தொகையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரமான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க, மேம்பட்ட விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். உற்பத்தி, மகசூலை அதிகரிப்பது, வெளிப்படையான ஏல மையங்கள், சிறந்த சந்தைப்படுத்துதல் வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
இயந்திர நவீனமயமாக்கல், தானியங்கி தொழில்நுட்பம், மின்சார சேமிப்பு முதலீடுகளுக்கு 25 சதவீத மூலதன மானியம் வழங்கும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும். தமிழகத்தின் முக்கிய பருத்தி நுகா்வு மையங்களில் இந்திய பருத்திக் கழகத்தின் கிடங்குகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, தொழில் துறை தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிஸ்பா நிா்வாகிகள் அமைச்சா் வி.சம்பத்குமாரிடம் வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.