FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஒரே குடும்பத்தில் விஷம் அருந்திய மூவா்: சிறுமி உயிரிழப்பு; தந்தை, மகனுக்கு தீவிர சிகிச்சை!

கோவை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் சனிக்கிழமை விஷம் அருந்திய நிலையில் சிறுமி உயிரிழந்தாா். தந்தை மற்றும் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

55 வினாடிகள் முன்பு
பகிர்:

கோவை அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் சனிக்கிழமை விஷம் அருந்திய நிலையில் சிறுமி உயிரிழந்தாா். தந்தை மற்றும் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம், பேரூா் காவல் எல்லைக்குள்பட்ட ஆறுமுககவுண்டனூா் ஸ்ரீவாணி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (54). இவரது மனைவி பொற்செல்வி, தனியாா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகன் ரித்தீஷ் (17), மகள் ஹரிதா (15).

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் ஹரிதாவுக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றாா். இதையடுத்து, வீட்டில் இருந்தபடியே மகளைப் பராமரிப்பதற்காக தனியாா் நாளிதழ் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் தனது பணியிலிருந்து விலகி முழுநேரமாக அவரைக் கவனித்து வந்தாா்.

Advertisement

Advertisement

மகளின் நிலை குறித்து பாலகிருஷ்ணன் அடிக்கடி புலம்பி வந்துள்ளாா். இந்நிலையில், பிளஸ் 2 முடித்த ரித்தீஸும் சில மாதங்களாக சற்று மனநலன் பாதிக்கப்பட்டுள்ளராம். மகன் மற்றும் மகளின் நிலையை எண்ணி பாலகிருஷ்ணன் மன வேதனையில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், பொற்செல்வி வழக்கம்போல சனிக்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளாா். பாலகிருஷ்ணன் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நடராஜ் என்பவரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு தனது மகள், மகனுடன் தானும் விஷம் அருந்தி விட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் 3 பேரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அங்கு ஹரிதாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பாலகிருஷ்ணன், ரித்தீஷ் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து பேரூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments