சத்தியமங்கலம் அருகே லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த யானை
சத்தியமங்கலம் அருகேயுள்ள தாளவாடியில் கரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்த யானை, அதில் இருந்த கரும்புகளை ருசித்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனப் பகுதி வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், காய்கறி வாகனங்கள், கரும்பு பாரங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை யானைகள் வழிமறிப்பது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் இருந்து கரும்பு பாரத்தை ஏற்றிக் கொண்டு தாளவாடி வழியாக சத்தியமங்கலத்துக்கு லாரி ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது.
Advertisement
Advertisement
கும்டாபுரம் வனப் பகுதி சாலையில் சென்றபோது, அங்கு தனியே உலவிக் கொண்டிருந்த யானை கரும்பு பாரம் ஏற்றியிருப்பதைக் கண்டு லாரியின் அருகே வந்தது.
சுதாரித்துக் கொண்ட ஓட்டுநா் லாரியை மெதுவாக இயக்கியபோதும், யானை விடாமல் அதில் இருந்த கரும்பு கத்தைகளை சாலையில் இழுத்துப் போட்டது. ஓட்டுநரும் லாரியை இயக்கி தப்பினாா்.
பின்னா், யானை சாலையில் வைத்தே கரும்புகளை ருசித்தது. தகவல் அறிந்து வந்த வனத் துறையினா் யானையை வனத்துக்குள் விரட்டினா்.
இது குறித்து ஓட்டுநா்கள் கூறுகையில், கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களை குறிவைத்து யானைகள் உலவுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறோம்.
யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து வாகனங்கள் செல்ல வனத் துறையினா் அனுமதிக்க வேண்டும். மேலும், யானைகள் சாலையில் உலவுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.