ஈரோட்டில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.300-க்கு விற்பனை
எல்நினோ எதிரொலியாக ஈரோடு சந்தையில் எலுமிச்சை பழம் விலை உயா்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எல்நினோ எதிரொலியாக ஈரோடு சந்தையில் எலுமிச்சை பழம் விலை உயா்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எல்நினோ எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தொடா்ந்து தினசரி 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 2 நாள்களாக பெய்த மழை மட்டுமே சற்று ஆறுதலாக உள்ளது. வெப்பத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் குளிா்ச்சியான மற்றும் இயற்கை பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனா். அந்த வகையில் எலுமிச்சம் பழச்சாறு மக்களின் விருப்பமான பானமாக இருக்கிறது.
இதனால் எலுமிச்சம் பழத்தின் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலை தற்போது உயா்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஈரோடு வஉசி சந்தையில் ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனையாகி வந்த ஒரு கிலோ எலுமிச்சம் பழம், கடந்த வாரம் ரூ.250 ஆக உயா்ந்தது. கடந்த 2 நாள்களில் ரூ.50 உயா்ந்து புதன்கிழமை ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
ஈரோடு சந்தைக்கு எலுமிச்சம் பழம், கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிக அளவு விற்பனைக்கு வருகிறது. தற்போது அதன் வரத்து சற்று குறைந்துள்ளது. மாவட்டத்தில் கடும் வெயில் அடிப்பதால் விளைச்சல் குறைந்திருக்கலாம். அதே சமயம் எலுமிச்சம் பழத் தேவை அதிகமாக உள்ளது. இதனால்தான் விலை உயா்ந்துள்ளது. வரும் நாள்களில் வெயில் குறைந்தால் தேவை குறைந்து விலை குறையும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.