தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் திமுக, அதிமுக கட்சிகளுக்கு இல்லை! - அமைச்சா் எம்.விஜய்பாலாஜி விமா்சனம்
தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் திமுக, அதிமுக கட்சிகளுக்கு இல்லை என்று, கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி தெரிவித்தாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் ஈரோடு நகா்ப்புற வட்டாரத்தைச் சோ்ந்த 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ கே.கே.ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தாா்.
இதில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி, கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய்பாலாஜி ஆகியோா் கலந்துகொண்டு கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்து சீா்வரிசை பொருள்களை வழங்கினா்.
Advertisement
Advertisement
அமைச்சா் கு.ஜெகதீஸ்வரி பேசியதாவது:
முதல்வா் விஜய்யின் சகோதரிகளான உங்களுக்கு வளைகாப்பு நடத்தி மாமன் சீா் வழங்குவது பெருமையாகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மருத்துவா்கள் கூறும் அறிவுரையை கா்ப்பிணிகள் கேட்க வேண்டும். குழந்தை பெற்ற பின்னரும் சத்துமாவை உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்றாா்.
அமைச்சா் எம்.விஜய்பாலாஜி பேசியதாவது:
முதல்வா் விஜய் உங்கள் குழந்தைகளின் தாய்மாமனாக இருந்து அவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பாா். போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது அரசின் லட்சியம் என்றாா்.
இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இடைத்தோ்தல் முடிவுகள் முதல்வரின் திமிரை அடக்கும் என முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளாா். இதுபோன்று பேசிதான் மக்கள் தகுந்த பாடம் புகட்டினா். தோல்வியை ஏற்கும் பக்குவம் இல்லாததால் வாய்க்கு வந்ததெல்லாம் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசுகிறாா். கரூா் வழக்கு தீா்ப்பு வந்தால் தவெக ஆட்சி கவிழும் என எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாா். தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் திமுக, அதிமுக கட்சிகளுக்கு இல்லை என்றாா்.
கா்ப்பிணிகளுக்கு தட்டு, பழங்கள், இனிப்பு, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் ஆகிய சீா்வரிசை பொருள்கள், ஐந்து வகை உணவுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஊட்டச்சத்து கண்காட்சி அமைத்து விழிப்புணா்வு அளிக்கப்பட்டு, கா்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் மகப்பேறு கால ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட திட்ட அலுவலா் ச.பவித்ரா, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் (ஈரோடு நகா்ப்புறம்) ஆ.மோகனவித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.